பெர்த்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியை எந்த தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் நேரலையில் பார்க்கலாம் என்பதை காணலாம். அதேபோல் காலை எத்தனை மணிக்கு போட்டி தொடக்கம் மற்றும் வானிலை குறித்த தகவல்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை பெர்த் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்றுள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடருக்கு பின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் வழக்கத்திற்கு மாறாக ஒருநாள் தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் இந்திய அணி ஒரு புதிய மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. ஜடேஜா ஓரம்கட்டப்பட்டுள்ள நிலையில், அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகி இருப்பதால், அந்த இடத்தில் நிதீஷ் குமார் ரெட்டியை தயார் செய்ய வேண்டிய பொறுப்பும் இந்திய அணிக்கு இருக்கிறது.
இப்படியான சூழலை ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது கூடுதல் சிக்கல் தான். இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில், அது இந்திய ரசிகர்களிடையே கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தும். ஏனென்றால் 2 ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டனான ரோகித் சர்மாவின் இடத்திற்கு சுப்மன் கில் கொண்டு வரப்பட்டுள்ளார்.
அதேபோல் 2027 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தயார் செய்ய வேண்டிய பொறுப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்திய கேப்டன் சுப்மன் கில் மற்றும் ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சல் மார்ஷ் இருவரையும் இணைத்து கோப்பையுடன் போட்டோஷூட் எடுக்கப்பட்டது. இதனிடையே இந்தப் போட்டியில் எந்த தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் நேரலை செய்யப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் முழுவதுமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஓடிடியை பொறுத்தவரை ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. அதேபோல் இந்தப் போட்டியை பொறுத்தவரை நாளை காலை 9 மணிக்கு போட்டியின் முதல் பந்து வீசப்படும். காலை 8.30 மணிக்கு டாஸ் போடப்பட உள்ளது.
பெர்த் மைதானம் அமைந்துள்ள பகுதியை பொறுத்தவரை வானிலையில் பெரியளவில் மாற்றம் இருக்காது என்று சொல்லப்படுகிறது. மழை பெய்ய வாய்ப்புகள் குறைவு என்பதால், இந்த போட்டி நடப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. அதேபோல் பகல் போட்டி என்பதால் பனிப்பொழிவு பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.