இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை பார்க்காலாம்.
உலகக்கோப்பை தொடர் இன்னும் 2 வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கிய முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் தொடங்கவுள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் இந்திய அணி தொடரை வெல்ல முடியும். இந்தூர் மைதானத்தை பொறுத்தவரை இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பிடித்த ஆடுகளம் என்று சொல்ல முடியும். ஏனென்றால் இந்த மைதானத்தில் தான் முன்னாள் வீரர் சேவாக் இரட்டை சதம் விளாசினார். அதேபோல் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் ரோகித் சர்மா 36 பந்துகளில் சதம் விளாசினார். அதேபோல் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில்லும் சதம் விளாசி இருக்கிறார்.
இந்த மைதானத்தில் ஸ்ட்ரெய்ட் பவுண்டரி 70 மீட்டர்களுக்கு குறைவாகவும், ஸ்கொயர் பவுண்டரி 60 மீட்டர்களுக்கு குறைவாகவும் இருக்கும். இதனால் தார் ரோட்டை போல் அமைக்கப்பட்டுள்ள இந்த பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கத்தை போல் இருக்கும். ஆனால் பந்துவீச்சாளர்களுக்கு இந்த ஆடுகளம் எமனாக அமையும். அந்த அளவிற்கு பந்துவீச்சாளர்களை சிரமங்களை சந்திப்பார்கள்.
குறிப்பாக ஸ்பின்னர்களின் பாடு திண்டாட்டமாகவே இருக்கும். இதனால் அஸ்வின், ஜடேஜா, ஆடம் ஸாம்பா உள்ளிட்டோர் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். இதனால் எந்த அணி முதலில் பேட்டிங் ஆடினாலும் குறைந்தபட்சம் 350 ரன்களாவது விளாசப்படுவது நிச்சயம் என்று சொல்லலாம். இந்தப் போட்டியில் இந்திய அணியை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படலாம்.
அவருக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் வேகப்பந்துவீச்சாளர்களாக ஷமி, சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இருக்கலாம். சுழற்பந்துவீச்சாளர்களாக மீண்டும் அஸ்வின் மற்றும் ஜடேஜா இணை களமிறங்க வாய்ப்புகள் உள்ளது. மற்றபடி முதல் போட்டியில் ஆடிய அதே அணியே களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.