இந்தூர்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூர் மைதானத்தில் நடக்கவுள்ளது. அந்த பிட்ச்சில் இந்திய வீரர்கள் செய்த சம்பவங்களை பற்றி பார்க்கலாம்.
இந்திய ஆடுகளங்களை பொறுத்தவரை பிளாட், பிளாட்டர், பிளாட்டஸ்ட் என்ற வகையில் பிரிக்கலாம். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள இந்தூர் ஆடுகளம் பிளாட்டஸ்ட் பிட்ச்சாகும். பாகிஸ்தானில் உள்ள லாகூர் பிட்ச் தார் ரோடு என்று கிண்டல் செய்தால், இந்தூர் பிட்ச்சை தேசிய நெடுஞ்சாலை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு மறக்க முடியாத சம்பவங்கள் இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது.

கடைசியாக இந்தூர் மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 389 ரன்களை குவித்தது. அந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் சதம் விளாசினர்.
அதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் இரட்டை சதத்தை விளாசியது இதே மைதானத்தில் தான். அதேபோல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் 36 பந்துகளில் சதத்தை விளாசினார். அன்றையப் போட்டியில் ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தவில்லை என்றால், டி20 கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மா ஒரு இரட்டை சதத்தை பதிவு செய்திருப்பார்.
அதேபோல் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் 78 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்தார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் முதல்தர கிரிக்கெட்டில் 94 பந்துகளில் 173 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்தூர் மைதானத்தில் ஸ்ட்ரெய்ட் பவுண்டரியே 70 மீட்டர் தூரத்திற்கும் குறைவாகவும், ஸ்கொயர் பவுண்டரி 60 மீட்டர் தூரத்திற்கு குறைவாகவும் இருக்கிறது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.