மும்பை : பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. தற்போது அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருப்பதால் மனைவியுடன் நேரத்தை செலவழிக்க ஆஸ்திரேலியாவுக்கு அவர் வர ஆர்வம் காட்டவில்லை.
இந்த சூழலில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த பும்ராவுக்கு கேப்டன் பதவி வழங்கப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது இருக்கும் வீரர்களிலேயே கோலி, அஸ்வின் ஆகியோர் இருக்கின்றனர்.

கோலி ஏற்கனவே கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில் அனுபவம் நிறைந்த வீரரான அஸ்வினுக்கு தான் அந்த பதவியை கொடுத்திருக்க வேண்டும். அஸ்வினுக்கு கிரிக்கெட் அறிவு மிகவும் அதிகம். அபாரமான யுக்திகளை வகுத்து விதிகளை சரியாக பயன்படுத்தி அஸ்வின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.
அஸ்வின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக இருந்திருக்கிறார். ஐபிஎல் தொடர் டிஎன்பிஎல் தொடர் ஆகியவற்றில் அஸ்வினுடைய கேப்டன்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருந்திருக்கிறது. இந்த சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 536 விக்கெட்டுகள் வீழ்த்தி பேட்டிங்கில் ஆறு சதம் அடித்திருக்கும் அஸ்வினுக்கு தான் கேப்டன் என்ற கௌரவத்தை பிசிசிஐ கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அஸ்வினுக்கு அந்த வாய்ப்பு தரப்படாமல் இருக்கின்றது. கும்ப்ளே தன்னுடைய இறுதி கட்ட கிரிக்கெட் வாழ்க்கையை எட்டி இருந்த நிலையில், டிராவிட் கேப்டன் பதவியில் ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவி கும்ப்ளேவுக்கு தேடி வந்தது. அணியில் சீனியர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபார சாதனைகளை படைத்திருக்கிறார் என்பதால் கும்ப்ளேவுக்கு அந்த கௌரவம் கிடைத்தது.
தற்போது அதேபோல் ஒரு சாதனையை படைத்திருக்கும் அஸ்வினுக்கு பிசிசிஐ கேப்டன் பதவி தராமல் ஜூனியர் வீரரான பும்ராவுக்கு வழங்கி இருக்கின்றது. இதனால் அஸ்வின் தமிழர் என்பதால் அவருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்படவில்லையா என்று தமிழ்நாட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கண்டிப்பாக அஸ்வினை பிளேயிங் லெவனுக்குள் சேர்த்து கேப்டன் பதவி தர வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.