சிட்னி: இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் பும்ரா காயம் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், இந்திய அணியின் மற்ற வீரர்கள் சிறப்பாக பவுலிங் செய்து மிரட்டி இருக்கின்றனர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கைகள் ஓங்கியுள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்களை சேர்த்திருந்தது. இதன்பின் 2வது நாள் ஆட்டத்தை லபுஷேன் - கான்ஸ்டஸ் கூட்டணி தொடங்கியது.

இதில் பும்ரா வீசிய 4வது ஓவரிலேயே லபுஷேன் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, தொடர்ந்து கான்ஸ்டஸ் - ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி நிதானமாக ரன்களை சேர்த்தது. ஒரு கட்டத்தில் பும்ராவின் பந்தை கான்ஸ்டஸ் தொடுவதற்கே அஞ்சி நடுங்க, இன்னொரு பக்கம் சைலன்ட்டாக வந்த சிராஜ் ஒரே ஓவரில் கான்ஸ்டஸை 23 ரன்களிலும், தொடர்ந்து வந்த ட்ராவிஸ் ஹெட்டை 4 ரன்களிலும் வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் ஸ்டீவ் ஸ்மித் - வெப்ஸ்டர் கூட்டணி இணைந்து விரைவாக ரன்களை சேர்க்க தொடங்கியது. இவர்களின் பார்ட்னர்ஷிப் 57 ரன்களை எட்டிய நிலையில், பிரசித் கிருஷ்ணா பவுலிங்கில் ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்திய அணி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மாஸ் கம்பேக்கை கொடுத்தது.
தொடர்ந்து வந்த அலெக்ஸ் கேரி 21 ரன்களில் பிரசித் கிருஷ்ணா வேகத்தில் போல்டாகி வெளியேற, திடீரென பும்ரா காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார். பும்ரா இல்லாமல் இந்திய அணி பவுலர்கள் சமாளிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், நிதிஷ் ரெட்டி பவுலிங்கில் அடுத்தடுத்து பேட் கம்மின்ஸை 10 ரன்களிலும், ஸ்டார்க்கை 1 ரன்னிலும் வீழ்த்தி அசத்தினார்.
இதனிடையே பும்ரா ஸ்கேன் பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். இதனால் பும்ரா இன்று களம் திரும்ப வாய்ப்பில்லை என்று தெரிய வந்தது. இதனால் பொறுப்பை சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் எடுத்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த வெப்ஸ்டரை 57 ரன்களில் பிரசித் கிருஷ்ணா வீழ்த்த, இறுதியாக ஸ்காட் போலண்ட் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தி அசத்தினார். ஆஸ்திரேலியா அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் இந்திய அணி 4 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தியது.
இந்திய அணி தரப்பில் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பும்ரா இல்லாமல் இந்திய அணியால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அசாத்தியமாக செயல்பட்டு பவுலர்கள் இந்திய அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்துள்ளனர். கடந்த 70 ஆண்டுகளில் சிட்னி மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் முதல் இன்னிங்ஸில் 200 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி இருப்பது 2வது முறையாகும். இதற்கும் 1979ல் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 200 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகியது.