நவி மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், இந்திய அணியின் வரலாற்று வெற்றிக்கு காரணமாக இருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், போட்டிக்குப் பிறகு தனது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் உடைந்து அழுதார். வெற்றி பெற்ற மகிழ்ச்சியை விட, கடந்த ஒரு மாதமாக தான் அனுபவித்த சொல்ல முடியாத மனப் போராட்டங்களையும், பதற்றத்தையும் அவர் வெளிப்படுத்திய விதம், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் நெகிழச் செய்துள்ளது.
மகளிர் கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த இன்னிங்ஸை ஆடிய ஜெமிமா, ஆட்ட நாயகி விருது வென்ற பிறகு, தனது உள்மனப் போராட்டங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

செய்தியாளர்களிடம் பேசியபோது, ஜெமிமாவின் குரல் தழுதழுத்தது. "நான் இங்கு என் மனதைப் வெளிப்படையாகப் பேசப் போகிறேன். ஏனென்றால், இதைப் பார்க்கும் யாரேனும் இதே போன்ற ஒரு சூழலில் இருந்தால், அவர்களுக்கு இது உதவக்கூடும். யாரும் தங்களின் பலவீனத்தைப் பற்றிப் பேச விரும்புவதில்லை. இந்தத் தொடரின் ஆரம்பத்தில் நான் தீவிரமான பதற்றத்தில் இருந்தேன். சில போட்டிகளுக்கு முன்பு கூட, என் அம்மாவுக்கு போன் செய்து முழு நேரமும் அழுதுகொண்டே இருப்பேன்" என்று கூறும்போதே அவர் உணர்ச்சிவசப்பட்டார்.
"அம்மாவிடம் அழுது தீர்த்துவிடுவேன். ஏனென்றால், நீங்கள் பதற்றத்தில் இருக்கும்போது, முற்றிலும் உணர்ச்சியற்ற ஒரு நிலையை உணர்வீர்கள். என்ன செய்வது என்று தெரியாது. இந்த நேரத்தில் என் பெற்றோர்தான் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தனர். அதேபோல், என் தோழி அருந்ததி ரெட்டியிடம்தான் நான் தினமும் அழுதுள்ளேன். பின்னர் நானே அவளிடம், 'என் முன்னால் வராதே, உன்னைப் பார்த்தால் அழுகை வந்துவிடும்' என்று வேடிக்கையாகக் கூறுவேன். ஆனால், அவள் ஒவ்வொரு நாளும் என் நலம் குறித்து விசாரிப்பாள்" என்று தனது நட்பை நினைவுகூர்ந்தார்.
இந்த உலகக் கோப்பையின் தொடக்கம் ஜெமிமாவுக்குச் சிறப்பாக அமையவில்லை. தொடர்ச்சியாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், இங்கிலாந்துக்கு எதிரான முக்கியப் போட்டியில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
"நான் அணியில் இருந்து நீக்கப்பட்டபோது, அது என்னை மிகவும் பாதித்தது. நீங்கள் அணியில் இருந்து நீக்கப்படும்போது, உங்கள் மீது உங்களுக்கே பல சந்தேகங்கள் எழும். அணிக்கு ஏதாவது பங்களிக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புவேன். ஆனால், வெளியே அமர்ந்துகொண்டு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. மீண்டும் அணிக்குத் திரும்பியபோது, கடந்த ஒரு மாதமாக நடந்த சம்பவங்களால் அழுத்தம் இன்னும் அதிகமாக இருந்தது" என்றார்.
"ஆனால், சில நேரங்களில் நாம் செய்ய வேண்டியதெல்லாம், மனம் தளராமல் நம்பிக்கையுடன் இருப்பதுதான். விஷயங்கள் தானாகவே சரியான இடத்திற்கு வரும். நான் நம்பிக்கை இழந்தபோது, என் மீது நம்பிக்கை வைத்து, என்னைப் புரிந்துகொண்டவர்களுக்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன். இது என்னால் தனியாகச் சாத்தியமாகவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.
துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுடனான தனது நெருங்கிய நட்பைப் பற்றிப் பேசிய ஜெமிமா, "ஸ்மிருதி எனக்கு மிகவும் உதவினார். நான் என்ன நிலையில் இருக்கிறேன் என்பது அவருக்குத் தெரியும். சில வலைப் பயிற்சிகளின்போது, அவர் எதுவும் பேசாமல் என் அருகில் நின்றுகொண்டிருப்பார். நேற்று கூட அவர் வந்தாள். எதுவும் பேசவில்லை, ஆனால் அவரது இருப்பு எனக்கு முக்கியம் என்பதை அறிவார்," என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இந்த வரலாற்று வெற்றியின் மூலம், இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. அரையிறுதியில் சதம் அடித்து அணியை வெற்றிபெறச் செய்த ஜெமிமாவின் பின்னணியில், இவ்வளவு பெரிய மனப் போராட்டம் இருந்ததை அறிந்து, ரசிகர்கள் அவருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.