மெல்போர்ன்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் டாப் 3ல் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பிடித்து அசத்தியுள்ளார். இதன் மூலமாக இந்திய ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் வரிசையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வந்திருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேநீர் இடைவேளை வரை ஆட்டம் டிராவை நோக்கி சென்ற நிலையில், திடீரென ரிஷப் பண்ட், ஜடேஜா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஜெய்ஸ்வாலின் மீதான அழுத்தம் அதிகமானது.

இருந்தாலும் கொஞ்சம் கூட கவலையின்றி சிறப்பாக ஆடி சதத்தை நோக்கி சென்ற ஜெய்ஸ்வால், யாரும் எதிர்பாராத வகையில் கம்மின்ஸ் வீசிய ஸ்லோ பவுன்சரில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ஆட்டம் ஆஸ்திரேலியா அணி பக்கம் திரும்பி இருக்கிறது. இதனிடையே 82 ரன்களை விளாசியதன் மூலமாக ஜெய்ஸ்வால் அசாத்திய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஒரே ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறார். நடப்பாண்டில் மட்டும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் உட்பட 1,478 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக 2008ஆம் ஆண்டு சேவாக் 1,462 ரன்கள் எடுத்த சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். 2010ஆம் ஆண்டு 23 இன்னிங்ஸில் விளையாடி 1,562 ரன்களை சச்சின் விளாசி இருக்கிறார். இவருக்கு பின் 1979ஆம் ஆண்டு சுனில் கவாஸ்கர் 1,555 ரன்களை விளாசியதன் மூலமாக 2வது இடத்தில் இருக்கிறார். இவர்களுக்கு பின் ஜெய்ஸ்வால் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், 3 பேட்ஸ்மேன்களுமே மும்பையை சேர்ந்தவர்கள் தான். இதனால் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா ஆகியோருக்கு பின் மும்பையின் பெருமையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.