மெல்போர்ன்: என் கிரிக்கெட் வாழ்க்கையில் உன்னை போன்ற ஒரு அதிர்ஷ்டக்கார பேட்ஸ்மேனை எங்கும் பார்த்ததில்லை என்று ஆஸ்திரேலியா அணியின் மார்னஸ் லபுஷேனை பார்த்து இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா கூறியுள்ளார். இந்திய அணியின் ஃபீல்டர்கள் அவருக்கு 3 கேட்ச்களை கோட்டைவிட்ட நிலையில், இந்த வார்த்தைகளை பும்ரா பேசி இருக்கிறார்.
ஆஸ்திரேலியா வீரர்களுக்கு ஒற்றை வில்லனாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா திகழ்ந்து வருகிறார். பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்களை குவித்த நிலையில், இந்திய அணி தரப்பில் 369 ரன்கள் குவிக்கப்பட்டது. இதன்பின் 105 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 43 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அப்போது இணைந்த ஸ்டீவ் ஸ்மித் - லபுஷேன் கூட்டணி நிதானமாக ரன்களை சேர்த்தது. இந்திய அணியின் பும்ரா, சிராஜ் இருவரும் வேறு லெவலில் தொடர்ந்து அட்டாக் செய்து கொண்டிருந்தனர். அப்போது சிராஜ் ஸ்டீவ் ஸ்மித்தை 13 ரன்களில் வீழ்த்த, பின்னர் வந்த ட்ராவிஸ் ஹெட் 1 ரன்னிலும், மிட்சல் மார்ஷ் டக் அவுட்டாகியும், அலெக்ஸ் கேரி 2 ரன்களிலும் பும்ராவின் வேகத்தில் ஆட்டமிழந்தனர்.
இருந்தாலும் ஒருமுனையில் லபுஷேன் மட்டும் தாக்குப்பிடித்து ஆடிக் கொண்டே இருந்தார். அவருக்கு ஏற்கனவே ஒரு கேட்சை ஜெய்ஸ்வால் கோட்டைவிட்டிருந்த நிலையில், மீண்டும் ஒரு கேட்சை கோட்டைவிட்டார். அதேபோல் ஏராளமான சிறந்த பந்துகளிலும் எட்ஜாகாமல் லபுஷேன் தப்பிக் கொண்டே இருந்தார். இதன் பலனாக அரைசதம் அடித்து அசத்த, இந்திய ரசிகர்கள் புலம்ப தொடங்கினர்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு எட்ஜில் இருந்து லபுஷேன் தப்பிய போது பும்ரா அவரை பார்த்து, உன்னை போன்ற ஒரு அதிர்ஷ்டம் உள்ள பேட்ஸ்மேனை என் வாழ்க்கையில் பார்த்ததே கிடையாது என்று கூறியிருக்கிறார். பும்ராவின் வார்த்தைகள் ஸ்டம்ப் மைக்கில் பதிவாக, அதனை வர்ணனையாளர்கள் விவாதிக்க தொடங்கினர்.
இதன்பின் இறுதியாக சிராஜ் வேகத்தில் லபுஷேன் 139 பந்துகளில் 70 ரன்களை எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இந்திய அணி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆஸ்திரேலியா அணியின் முன்னிலை 290 ரன்களை கடந்துள்ள நிலையில், மெல்போர்ன் மைதானத்தில் இதுவரை 270 ரன்கள் கூட சேஸிங் செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.