வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மழையால் பெருமளவு இந்த போட்டி பாதிக்கப்பட்ட நிலையில் டிராவில்தான் இந்த டெஸ்ட் முடிவடையும் என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் நினைத்தனர்.
ஆனால் இந்திய அணி யாருமே எதிர்பார்க்காத வகையில் அபாரமாக விளையாடி வெற்றியை ருசித்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இந்த போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

மழையால் போட்டி வெகுவாக பாதிக்கப்பட்டதால் முதல் நாள் முடிவில் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இதில் மூன்று விக்கெட் இழப்பிற்கு வங்கதேச அணி 107 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து இரண்டு நாட்கள் மட்டுமே எஞ்சி இருந்த நிலையில் போட்டி சமனில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
அப்போதுதான் இந்திய அணி வீரர்கள் அபாரமாக செயல்பட்டு வங்கதேச அணியை 233 ரன்களில் ஆட்டமிழக்க வைத்தனர். அதிரடியாக விளையாடிய இந்திய அணி வீரர்கள் டி20 கிரிக்கெட் போல் வங்கதேச பந்துவீச்சை சிதறடித்தனர். ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 72 ரன்களும், கேஎல் ராகுல் 43 பந்துகளில் 68 ரன்களும் எடுக்க, விராட் கோலி 35 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார்.
இதனால் இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது. வெறும் 34.4 ஓவர்கள் எல்லாம் இந்திய அணி இவ்வளவு பெரிய இலக்கை சேர்த்தது. இதனை அடுத்து 52 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அஸ்வின் அபாரமாக பந்துவீசி ஜாகிர் ஹசன் மற்றும் ஹஸன் மகமுத் விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனை அடுத்து 26 ரன்களுக்கு இரண்டு விக்கெட் என்ற ஸ்கோருடன் கடைசி நாள் ஆட்டத்தை வங்கதேச அணி தொடங்கியது. இதில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் அபாரமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிறகு பும்ரா தன்னுடைய ஆக்ரோஷமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதில் வங்கதேச அணி கொஞ்சம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் 47 ஓவர் முடிவில் 146 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் அஸ்வின், ஜடேஜா, புஜாரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் கடைசி இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார். ரோகித் சர்மா 8 ரன்களில் வெளியேற கில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.
விராட் கோலி கடைசி வரை நின்று 29 ரன்கள் சேர்த்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்தியா வெறும் 17.2 ஓவர் மட்டுமே வெற்றிக்கு எடுத்துக் கொண்டது. இதன் மூலம் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.