கான்பூர் : இந்திய ,வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை வெள்ளிக்கிழமை கான்பூர் நகரில் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்றால் மேலும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டும்.
அது மட்டுமல்லாமல் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் நாளைய ஆட்டத்தையும் வென்றால் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான அணி கைப்பற்றி விடும். இந்த நிலையில் வரும் 16ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குகிறது.

இந்த தொடர் மிகவும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். இதன் காரணமாக பும்ரா நியூசிலாந்து டெஸ்டில் மிகவும் முக்கியமான வீரராக திகழ்வார். இதனால் அவருக்கு ஓய்வு அளிக்க ரோகித் சர்மா கம்பீர் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இந்த ஓய்வு தேவையில்லை என்றும் ஏற்கனவே அவர் ஓய்வில் இருந்து தான் அணிக்கு வந்திருப்பதாகவும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
பும்ராவுக்கு அடிக்கடி ஓய்வு வழங்கினால், அது அவருடைய உடல் நலத்தை பாதிக்கும் என்றும் சிலர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா களமிறங்குவார்கள். ரோகித் சர்மா வங்கதேசத்துக்கு எதிராக தடுமாறி வரும் நிலையில் நாளைய டெஸ்டில் அவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
கில் சதம் அடித்து தன்னுடைய இடத்தை உறுதி செய்திருக்கிறார். இதேபோன்று விராட் கோலி நான்காவது வீரராக களமிறங்குவார்.
விராட் கோலியும் முதல் டெஸ்டில் தடுமாறியதால் அவருக்கும் இந்த டெஸ்ட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர் கடைசியாக 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாவது வீரராக கே எல் ராகுல் இருக்கிறார். ராகுல் முதல் டெஸ்டில் சரியாக விளையாடவில்லை.இதனால் இரண்டாவது டெஸ்டில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.
ஆறாவது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் செயல்பட போகிறார். ஏழாவது வீரராக ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் எட்டாவது வீரராக தமிழக வீரர் அஸ்வினும் செயல்பட உள்ளனர்.
இந்த நிலையில் கான்பூர் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் குல்தீப் யாதவ் விளையாடக் கூடும். இதே போன்று, மூன்று வேகப்பந்து வீச்சாளராக முஹமது சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் யாஸ் தயால் செயல்பட வாய்ப்பு இருக்கிறது.