கான்பூர் : இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மூன்றாவது நாளும் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஆட்டத்தின் இரண்டு நாட்கள் மட்டும் தான் எஞ்சி இருக்கிறது. வங்கதேச அணி முதல் நாள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருக்கிறது.மொத்தமாக நடந்த மூன்று நாட்களில் வெறும் 35 ஓவர்கள் தான் வீசப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் எஞ்சி இருக்கும் ஒன்பது போட்டிகளில் நான்கில் வெற்றி பெற வேண்டும். இதில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்தால் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்ல வேண்டும் என்றால் யாருமே செய்ய முன்வராத ஒரு விஷயத்தை செய்ய வேண்டும். அதற்கு வங்கதேச அணி கேப்டனும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதாவது வங்கதேச அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸையும் இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்சையும் விளையாடாமல் ரத்து செய்து கொள்கிறோம் என முடிவெடுத்துக் கொண்டால் இந்த போட்டியில் முடிவு ஏற்படலாம்.
அதாவது வங்கதேச அணி தற்போது 107 ரன்கள் எடுத்துள்ள நிலையில் முதலில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விடுகிறது என வைத்துக் கொள்வோம். அப்போது இந்திய அணி தாங்கள் தங்களுடைய முதல் இன்னிங்ஸ் விளையாடாமல் ரத்து செய்து கொள்கிறோம் என்று கூறவேண்டும். இதேபோன்று வங்கதேசம் அணி நாங்களும் எங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை விளையாடாமல் ரத்து செய்து கொள்கிறோம் என்று தெரிவிக்க வேண்டும்.

இதை அடுத்து இந்திய அணி நாங்கள் எங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை விளையாட போகிறோம் என்று களம் இறங்கி வங்கதேசம் அடித்த இலக்கை விட 1 ரன் அதிகமாக அடித்தால் இந்தியா வென்றுவிடும். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2000-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவும் இங்கிலாந்தும் மோதிய ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது.மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் ஹன்சி குரோஞ் இவ்வாறு ஒரு முடிவை எடுத்தார்.
அதற்கு இங்கிலாந்து அணி கேப்டன் நாசர் உசேனும் ஒப்புக்கொண்டார். இதை அடுத்து இரு அணிகளும் தங்களுடைய ஒரு இன்னிங்ஸை ரத்து செய்த நிலையில் தென்னாப்பிரிக்கா அடித்த 248 ரன்கள் என்ற இலக்கை விட ஒரு ரன் அதிகம் அடித்தால் வெற்றி என்ற நெருக்கடியில் இங்கிலாந்து களமிறங்கி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு இந்த ஆட்டத்தில் முடிவு மிகவும் முக்கியம் என்பதால் இவ்வாறு ஒரு யுக்தியை இரு அணி கேப்டன்களும் எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.