கான்பூர் : வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற்றதற்கு பும்ராவின் பங்கு மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.
சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் பும்ரா சிறப்பாக பநதுவீசி விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். சென்னை டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட், 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டும் வீழ்த்திய பும்ரா கான்பூர் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த தொடரில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

இந்த சூழலில் கான்பூர் டெஸ்ட் போட்டி டிராவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா வென்று அசத்தியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பும்ரா, இந்தப் போட்டியில் பெரும்பான நேரம் மழையால் பாதிக்கப்பட்டது. மொத்தமாக இரண்டு நாட்களை நாங்கள் இழந்தோம். இருந்த போதிலும் நாங்கள் வெற்றி பெற்றிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
இது போன்ற சூழ்நிலையில் அனுபவம் என்பது மிகவும் முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. இந்த வெற்றியை பெற நான் என்னுடைய அனுபவத்தை பயன்படுத்தினேன். இதை சொல்வதைவிட செய்வது மிகவும் கடினமாக இருந்தது. சென்னையில் இருந்த ஆடுகளத்தை விட இது முற்றிலும் மாறுபட்டு இருந்தது.
எங்களுக்கு முன் இருக்கும் பிரச்சனைகளை வீரர்கள் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து ஆலோசனை செய்து எதிர்கொள்கிறோம்.
இந்திய மண்ணில் நாங்கள் பல டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவிட்டதால் ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். எந்த வகையான பந்தை வீச வேண்டும் என்பது குறித்து சீனியர் வீரர்களுடன் ஆலோசனை செய்வோம்.
தற்போது எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பணி என்பது மற்ற பவுலர்களுக்கு துணையாக இருக்க வேண்டியது என்பது தான். ஆகாஷ் தீப் என்னிடம் வந்து நிறைய ஆலோசனைகளை கேட்டார். வெற்றியை பெற வேண்டும் என்ற உத்வேகம் ஆகாஷ் தீப்க்கு இருக்கிறது. எப்போதெல்லாம் பந்து வீச வேண்டுமோ அப்போதெல்லாம் சிறப்பாக அவர் செயல்படுகிறார்.
உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு எனக்கு அதிக நேரம் ஓய்வு கிடைத்தது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் மிக நீண்ட கடினமான தொடராக இருக்கும். அதற்காக தான் இவ்வளவு ஓய்வு எங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பும்ரா கூறியுள்ளார்.