கான்பூர் : வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த போட்டி கிட்டத்தட்ட இரண்டரை நாட்கள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் போட்டி டிராவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
இந்த சூழலில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில் கம்பீர் தொடர்பான உறவு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா, வாழ்க்கையில் அனைவரும் ஒவ்வொரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல வேண்டும். நாம் விதவிதமான மனிதர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். டிராவிட் நான் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து செல்கிறேன் என்று கூறினார்.

அவருடன் பணியாற்றிய காலம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எதுவாக இருந்தாலும் வாழ்க்கையை நாம் வாழ வேண்டும். நாங்கள் ஒரு அணியாக தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்று விட்டோம். கம்பீர் குறித்து கேட்டால் அவரை எனக்கு நன்றாக தெரியும். நான் அணியில் ஜூனியர் வீரராக இருந்தபோது, என்னுடைய சீனியராக கம்பீர் இருந்து இருக்கிறார்.
கம்பீர், எவ்வாறு விளையாடுவார் அவருடைய மனது எப்படி வேலை செய்யும். என்றெல்லாம் எனக்கு தெரியும். தற்போது பயிற்சியாளராக கம்பீருக்கு இது வெறும் தொடக்கம்தான். ஆனால் இது நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது குறித்து நாங்கள் கடுமையாக முயற்சித்தோம். இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் தான் இருக்கிறது என தெரிந்தவுடன் வங்கதேசத்தை விரைவில் ஆட்டம் இழக்க வைத்து விட்டு பின் அவர்கள் எவ்வளவு ஸ்கோரை எடுத்தார்களோ அந்த ஸ்கோரை அதிரடியாக விளையாடி எடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.
நாங்கள் ரன்கள் குறித்து யோசிக்கவே இல்லை. எத்தனை ஓவர்கள் வீச வேண்டும் என்பது குறித்து தான் நாங்கள் திட்டமிட்டோம். அது மட்டுமில்லாமல் ஆடுகளமும் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படவில்லை. எனினும் எங்களுடைய பௌலர்கள் அபாரமாக செயல்பட்டு வங்கதேசத்தின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்கள். இதேபோன்று பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாட வேண்டுவதற்கு தேவையான ரிஸ்க்குகளை எடுத்து விளையாடுகிறார்கள்.
போட்டியில் முடிவு வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து ஒவ்வொரு வீரர்களும் விளையாடினார்கள். ஆகாஷ் தீப் இந்த டெஸ்டில் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். அவருக்கு உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிற அனுபவம் இருக்கிறது. ஆகாஷ் தீப் தொடர்ந்து அதிக நேரம் பந்து வீசும் படியும் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட பல பவுலர்களை நாங்கள் தயார்படுத்தி வைத்திருக்கிறோம். இதன் மூலம் யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் மாற்று வீரர்களை நாங்கள் உடனடியாக தேர்வு செய்ய முடியும் என்று ரோகித் சர்மா கூறினார்.