கான்பூர் : வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது இன்னிங்ஸிலும் எட்டு ரன்களில் ஆட்டம் இழந்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன்சியில் கில்லி போல் செயல்படும் ரோகித் சர்மா பேட்டிங்கில் வங்கதேசத்துக்கு எதிராக தொடர்ந்து தடுமாறி வருகிறார்.
இதுவரை 60 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா மொத்தமாக 4148 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 12 சதம், 17 அரை சதம் அடங்கும். சராசரி 44 ரன்கள் ஆகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 708 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக 1147 ரன்கள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 738 ரன்கள் என பெரிய அணிகளுக்கு எதிராக பட்டையை கிளப்பி உள்ளார்.

ஆனால், ரோகித் சர்மா வங்கதேசத்துக்கு எதிராக மட்டும் ஐந்து டெஸ்ட் போட்டிகளின் விளையாடி வெறும் 75 ரன்கள் தான் சேர்த்திருக்கிறார். இதில் அதிகபட்சமாக அவர் அடித்த ஸ்கோர் 23 ரன்கள் தான். அந்த ரெக்கார்டை ரோகித் சர்மா மாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தத் தொடரிலும் அவர் தடுமாறினார். இந்த சூழலில் 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இந்திய அணி களம் இறங்கியது.
இதனால் ரோகித் சர்மா அரை சதம் அடித்து வங்கதேசத்துக்கு எதிரான ரெக்கார்டை சரி செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் 7 பந்துகளை எதிர் கொண்டு ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து 8 ரன்களில் ஆட்டம் இழந்தார். மெஹதி ஹசன் வீசிய சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ரோகித் ஆட்டம் இழந்தார். இதனால் இந்திய அணி 18 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.
ரோகித் சர்மா கடந்த நான்கு இன்னிங்ஸ்களில் ஒரு முறை கூட அரை சதம் எடுக்கவில்லை. இந்த சூழலில் அடுத்தடுத்து பெரிய டெஸ்ட் தொடர்கள் ரோகித் சர்மாவுக்கு காத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் என எட்டு டெஸ்ட் போட்டிகள் வரிசையாக இருக்கிறது. இதில் எல்லாம் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றால் தொடக்கத்தில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி ரன்களை சேர்க்க வேண்டும்.