சென்னை: 82 நாட்களுக்கு பின் இந்திய அணிக்காக களமிறங்கிய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி ஆச்சரியம் கொடுத்துள்ளார். வங்கதேச அணியின் இளம் தொடக்க வீரரான ஷாத்மன் இஸ்லாமை அசால்ட்டாக போல்டாக்கி வெளியேற்றியது ரசிகர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி 339 ரன்கள் குவித்திருந்தது. இதன்பின் 2வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்த சூழலில், கூடுதலாக 37 ரன்கள் மட்டுமே சேர்த்து 4 விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும் சேர்த்தனர். வங்கதேசம் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்பின் வங்கதேசம் அணி தரப்பில் ஷாத்மன் இஸ்லாம் - ஜாகீர் ஹசன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை பும்ரா வீச அழைக்கப்பட்டார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு நீண்ட ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. 82 நாட்களுக்கு பின் பும்ரா நேரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கினார். இதனால் பும்ராவின் பவுலிங் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. பும்ரா பவுலிங் செய்ய பந்தை கையில் எடுத்த போதே, சேப்பாக்கத்தில் இருந்த ரசிகர்களின் கரகோஷம் அதிகரித்தது. ஓவர் தி விக்கெட் திசையில் இருந்து பும்ரா தொடங்கினார்.
முதல் பந்தில் ரன் ஏதும் சேர்க்கப்படாத சூழலில், 2வது பந்தில் 2 ரன்கள் சேர்க்கப்பட்டது. அதன்பின் அடுத்த 3 பந்துகளிலும் ஒரு ரன் கூட சேர்க்கப்படவில்லை. இதனிடையே பும்ராவின் பவுலிங்கை எதிர்கொண்ட ஷாத்மன் இஸ்லாம் டிஃபென்ஸின் போது ஆஃப் ஸ்டம்பை லைனை காட்டியது தெரிய வந்தது. இதனை கவனித்த பும்ரா, கடைசி பந்தை வீசுவதற்காக மட்டும் ரவுண்ட் தி விக்கெட் பக்கம் வந்தார்.
கடைசி பந்தை பும்ரா சரியான லெந்தில் பிட்ச் செய்ய, அந்த பந்து நேராக ஆஃப் ஸ்டம்பின் பைல்ஸை தூக்கி சென்றது. இதனால் முதல் ஓவரின் கடைசி பந்திலேயே பும்ரா விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இது வங்கதேச வீரருக்கே அதிர்ச்சியாக இருந்தது. ஆஃப் ஸ்டம்ப் லைனை கவர் செய்யாமல் விட்டது எப்படி என்று புலம்பிக் கொண்டே பெவிலியன் திரும்பினார். இந்த வீடியோ சோசியல் மீடியாவிலும் ட்ரெண்டாகி வருகிறது.