சென்னை: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்களான பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப், சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் இந்திய அணி 227 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேசம் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியுடன் அமைந்தது. முதல் ஓவரிலேயே ஷாத்மன் இஸ்லாம் 2 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஆகாஷ் தீப் வேகத்தில் ஜாகீர் ஹசன் 3 ரன்களிலும், மோமினுல் ஹக் டக் அவுட்டாகியும் அடுத்தடுத்த பந்துகளில் போல்டாகி வெளியேறினர். இதனால் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து உணவு இடைவேளைக்கு பின் சிராஜ் வேகத்தில் கேப்டன் ஷான்டோ 20 ரன்களில் வெளியேற, அனுபவ வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம் 8 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.
இதனால் வங்கதேசம் அணி 40 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் சீனியர் வீரர்களான ஷகிப் அல் ஹசன் - லிட்டன் தாஸ் இருவரும் சிறிது நேரம் சவால் அளித்தனர். இவர்கள் 6வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஜடேஜாவை ஸ்வீப் ஷாட் அடிக்கும் முயற்சியில் லிட்டன் தாஸ் 22 ரன்களிலும், ஷகிப் அல் ஹசன் துரதிஷ்டவசமக 32 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் பும்ரா வேகத்தில் டெய்லண்டர்கள் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டை சிராஜ் வீழ்த்தி அசத்தினார். இதன் காரணமாக வங்கதேசம் அணி 47.1 ஓவர்களில் 149 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக பவுலிங் செய்த பும்ரா 4 விக்கெட்டுகளையும்,. ஆகாஷ் தீப், சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதன் மூலமாக இந்திய அணி 227 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதனால் வங்கதேச அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பெவிலியன் திரும்பிய போது நடுவர் நேரடியாக ரோஹித் சர்மாவிடம் ஃபாலோ ஆன் கொடுக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ரோஹித் சர்மா ஃபாலோ ஆன் கொடுக்க விருப்பமில்லை என்று பதில் அளித்தார்.
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு போதுமான பேட்டிங் பயிற்சி தேவை என்ற நிலை உள்ளது. ஏனென்றால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதனால் பேட்டிங் செய்வதற்கு போதுமான நேரம் கிடைக்கும் என்பதால் ரோஹித் சர்மா இந்த முடிவை எடுத்துள்ளார். இதன் மூலம் பேட்ஸ்மேன்கள் ஃபார்முக்கு வருவதற்கு போதுமான நேரம் கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.