புனே: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் சதம் விளாச முடியவில்லை என்று சோகமடைந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி சுயநலமான விளையாடி சதம் விளாசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் சாதனைகள் மீதும், மைல்கல் மீதும் அதீத ஆர்வம் கொண்டவர்கள் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சிக்கும். இவ்வளவு ஏன், ஆஸ்திரேலிய அணியின் மேக்ஸ்வெல் கூட இந்திய அணி வீரர்களை, சதமடிப்பதற்காக அதிக பந்துகளை வீணாக்குவார்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்திய வீரர்களின் சுயநலம் எந்த அளவிற்கு மாறியுள்ளது என்றால், உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியின் வெற்றி, நெட் ரன் ரேட்டை விடவும் சொந்த சாதனைகள் முக்கியம் என்ற அளவிற்கு எல்லை மீறியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் சதம் அடிக்க முடியவில்லை என்பதால், சிக்சர் அடித்து வெற்றிபெற வைத்தும் சோகமாக அமர்ந்திருந்தார்.
இன்றைய ஆட்டத்தில் விராட் கோலிக்கு 42வது ஓவரின் முதல் பந்திலேயே இந்திய அணியை வெற்றி எல்லைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு கிடைத்தும், சில பந்துகளை வீணடித்து சிக்சர் விளாசி சதத்தை எட்டினார். அதேபோல் வெற்றி உறுதி என்று தெரிந்த பின்னர் அதிரடியாக விளையாடாமல் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலும் வேண்டுமென்றே வெற்றியை தாமதப்படுத்தியுள்ளார்கள்.
இந்த ஆட்டத்தை 2 ஓவர்களுக்கு முன்பாக முடித்திருந்தால், இந்திய அணியின் நெட் ரன் ரேட் நியூசிலாந்து அணிக்கு அருகில் சென்றிருக்கும். உலகக்கோப்பை போன்ற நீண்ட தொடர்களில் ரன் ரேட் எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். இரு அணிகள் ஒரே புள்ளியில் இருந்தால், நெட் ரன் ரேட்டை வைத்து தான் எந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு என்பது முடிவாகும்.
இதனால் இந்திய அணி வீரர்கள் சுயநலமான ஆட்டத்தை உலகக்கோப்பை தொடரிலாவது கைவிட வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர். அதேபோல் இந்தியா போன்ற நாட்டில் கிரிக்கெட் உயிர் போல் பார்க்கப்பட்டு வரும் சூழலில், ரசிகர்களும் வீரர்களை சொந்த சாதனைகளை வைத்தே மதிப்பிட்டு வருகின்றனர். இதனால் ரசிகர்களும் மாற வேண்டும் என்ற விமர்சனங்களும் அதிகரித்துள்ளது.