பெங்களூர்: துலீப் டிராபி தொடரின் இந்தியா பி அணிக்கு எதிரான முதல் போட்டியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதிலும் வாஷிங்டன் சுந்தரின் விக்கெட்டை ஸ்டம்புகளை சிதறடித்து ஆகாஷ் தீப் வீழ்த்திய விக்கெட் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியில் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு பின் பேக் அப் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகேஷ் குமார் மற்றும் ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் அறிமுகம் செய்யப்பட்டனர்.

ஆனால் இவர்களில் யாரும் இந்திய அணி நிர்வாகத்திற்கு முழுமையான நம்பிக்கையை கொடுக்கவில்லை என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சிராஜ் அறிமுகமான 4வது போட்டியிலேயே இந்திய அணியின் பவுலிங்கை அட்டாகை வழிநடத்தி காட்டி பலருக்கும் வியப்பை அளித்தார். அதுபோன்ற ஒரு புத்திசாலியான மற்றும் திறன் பெற்ற வேகப்பந்துவீச்சாளரை தான் இந்திய அணி நிர்வாகம் தேடி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் கடந்த முறையைப் போல் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் காயமடைந்தால், இந்திய அணியால் சமாளிக்க முடியுமா என்பதே கேள்விக்குறி தான். இதன் காரணமாக துலீப் டிராபியை நடத்தி பேக் அப் வேகப்பந்துவீச்சாளர்களை தயார் செய்யும் பணியை பிசிசிஐ தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியா ஏ - இந்தியா பி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்து வருகிறது. இதில் இந்தியா ஏ அணிக்காக விளையாடி வரும் ஆகாஷ் தீப்பின் செயல்பாடுகள் பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் முதல் இன்னிங்ஸில் 27 ஓவர்களை வீசிய ஆகாஷ் தீப் 60 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல் 2வது இன்னிங்ஸில் 14 ஓவர்களை வீசிய அவர், 56 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
ஆகாஷ் தீப்பிற்கு நிகராக எதிரணி பவுலர்களும் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்கள் என்றாலும், அவரின் ஸ்பெஷல் என்னவென்றால்.. வீழ்த்திய விக்கெட்டுகள் அனைத்து கீப்பர் கேட்ச் அல்லது போல்ட் என்ற வகையில் அமைந்துள்ளது. இதன் மூலமாக ஆகாஷ் தீப் சிறந்த ஸ்விங் பவுலராக நம்பிக்கை கொடுத்துள்ளார். அதிலும் வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை வீழ்த்திய விதம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடதுகை பேட்ஸ்மேனான வாஷிங்டன் சுந்தருக்கு அரெளண்ட் தி ஸ்டம்ப் லைனில் இருந்து பவுலிங் செய்த ஆகாஷ் தீப், தரமான இன் ஸ்விங்கை வீசி ஸ்டம்புகளை தெறிக்கவிட்டார். ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆகாஷ் தீப், புதிய பந்தில் எவ்வளவு சிறப்பாக ஸ்விங் செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டினார்.
அதேபோல் கீழ் வரிசையில் அதிரடியாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேனாகவும் ஆகாஷ் தீப் இருக்கிறார். இதனால் துலீப் டிராபி தொடரில் சிறப்பாக தொடர்ந்து செயல்படும் பட்சத்தில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.
அந்த 2 டெஸ்ட் தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டால், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான 4வது வேகப்பந்துவீச்சாளராக ஆகாஷ் தீப் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உருவாகும். ஏனென்றால் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஸ்விங் செய்யக் கூடிய வேகப்பந்துவீச்சாளரை இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா தேடி வருகின்றனர். இதனால் ஆகாஷ் தீப்பால் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும் என்று ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.