துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இமாலய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக அவர் 100 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில், வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ரோஹித் சர்மா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் வங்கதேச அணி 228 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி, 46.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. சுப்மன் கில் சதம் அடித்தார், ரோஹித் சர்மா 41 ரன்கள் எடுத்தார்.

இதுவரை நான்கு கேப்டன்கள் மட்டுமே இந்திய அணிக்காக 100 வெற்றிகளுக்கும் அதிகமாக பெற்றுக்கொடுத்துள்ளனர். முகமது அசாருதீன், தோனி, விராட் கோலி ஆகியோர் இதற்கு முன் இந்திய அணியின் கேப்டன்களாக 100 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளனர். அந்த வரிசையில் நான்காவதாக ரோஹித் சர்மா இணைந்துள்ளார்.
அவர்களை விடவும் மிகச்சிறந்த வெற்றி சதவீதத்தை ரோஹித் சர்மா வைத்துள்ளார். தற்போது ரோஹித் சர்மாவின் வெற்றி சதவீதம் 72 என்பதாக உள்ளது. அசாருதீனின் வெற்றி சதவீதம் 47.05%, தோனியின் வெற்றி சதவீதம் 53.61%, விராட் கோலியின் வெற்றி சதவீதம் 63.38% ஆக இருந்தது. அவர்களை விட மிகச் சிறந்த வெற்றி சதவீதத்தை ரோஹித் சர்மா வைத்துள்ளார்.
இதுமட்டுமின்றி, உலக அளவில் 100 வெற்றிகளை பெற்ற கேப்டன்கள் வரிசையில், அதை அதிவேகமாக செய்த பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ரிக்கி பாண்டிங்குடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். தற்போது ரோஹித் சர்மா 138 போட்டிகளில் 100 வெற்றிகளைப் பெற்று இந்த சாதனையை செய்துள்ளார். 33 போட்டிகளில் தோல்வியும், மூன்று போட்டிகள் டிராவும், ஒரு போட்டி டையிலும் முடிந்துள்ளன. ஒரு போட்டி பாதியில் கைவிடப்பட்டது.
மேலும் ஒரு சாதனையையும் ரோஹித் சர்மா செய்துள்ளார். 30 வயதிற்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் 100 வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். ரிக்கி பாண்டிங் 28 வயதிலிருந்து கேப்டனாக இருந்தார். ஆனால், ரோஹித் சர்மா 30 வயதுக்கு பின்னரே கேப்டன்சியை பெற்று 100 வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இருக்கிறார்.