மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் எப்போதுமே டெஸ்ட் போட்டிகளுக்கு என்று காலம் காலமாக ஸ்பெஷல் வீரர்களை தனியாக பிசிசிஐ பயன்படுத்தி வரும். எப்படி ஒரு காலத்தில் டிராவிட்,லக்ஷ்மன் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். அதன் பிறகு ரஹானே,புஜாரா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே விளையாடி வந்தனர்.
புஜாரா, ரஹானே ஆகியோர் இந்திய அணியில் இருக்கும் போது தான் நாம் வெளி நாடுகளில் குறிப்பிட தகுந்த வெற்றியைப் பெற்றோம். இந்த சூழலில் தற்போது இருக்கும் டெஸ்ட் அணியில் யாருமே அப்படி ஸ்பெஷல் வீரர்கள் என்று இல்லை. தற்போது இருக்கும் அணியில் அனைவருமே மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடும் வீரர்களாக இருக்கிறார்கள்.

இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையான பொறுமை இந்த இளம் வீரர்கள் மத்தியில் இல்லை. இதன் காரணமாக வரும் ஆஸ்திரேலியா தொடரில் இந்தியா தோற்க கூட வாய்ப்பு இருக்கிறது. சரி அடுத்த புஜாராவையாவது இந்திய அணி தயாரித்ததா என்று கேட்டால் இல்லை. ஹனுமா விகாரி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்று அளவெடுத்து செய்த பேட்ஸ்மேன் போல் இருக்கிறார்.
ஆனால் அவரையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசி இருக்கும் ஹனுமா விகாரி, ஆஸ்திரேலிய தொடரில் புஜாரா இல்லை என்றால் அந்தப் பணியை யார் செய்வார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் புஜாரா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக கருதுகிறேன்.
இந்திய டெஸ்ட் அணியின் முதுகெலும்பாக புஜாரா இருக்கிறார். கடந்த இரண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் புஜாரா தான் பேட்டிங்கில் ரன்களை சேர்த்தார். உடலில் பந்துகளை எதிர்கொண்டு களத்தில் அதிக நேரம் செலவிட்டு புதிய பந்தை அதிக நேரம் எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார். புஜாரா புதிய பந்தை பழையதாக்கி மற்ற பேட்ஸ்மேன்களுக்கும் தங்களது பணியை சுலபமாக்கி கொடுத்தார்.
எனவே இது போல ஒரு பணியை செய்யக்கூடிய வீரர் தற்போது அணியில் இருக்கிறார்களா என்பது தான் என்னுடைய கேள்வி. தற்போது உள்ள டெஸ்ட் அணியில் பேட்டிங் வரிசையில் இருக்கும் ஆறு வீரர்களுமே அதிரடியாக ஆடக்கூடியவர்கள். அனைவருமே ஷார்ட் ஆடி ரன் சேர்க்க வேண்டும் தான் நினைப்பார்கள்.
எனக்கு தெரிந்து விராட் கோலி மட்டும் தான் ஓரளவுக்கு பொறுமையாக விளையாடக்கூடிய வீரராக இருக்கிறார். எனவே விராட் கோலி, ஆஸ்திரேலியா தொடரில் களத்தில் அதிக நேரம் செலவிட்டு அதிக ஓவர்களை எதிர்கொண்டு ரன்களை சேர்க்க வேண்டும். புதிய பந்தை மட்டும் அதிக நேரம் எதிர்கொண்டால் பந்து பழையதாக்கிவிடும்.
அதன் மூலம் ரன்கள் சேர்ப்பது சுலபமாக மாறிவிடும். இந்த நிலையில் புஜாரா இல்லை என்றால் அந்தப் பணியை ராகுல் தான் செய்ய வேண்டும். கே.எல் ராகுலுக்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற மனங்களில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. கேஎல் ராகுல் நினைத்தால் அவர் பெரிய இன்னிங்ஸ் ஆடலாம் வெளிநாடுகளில் நன்றாகவும் விளையாடி இருக்கிறார்.
எனவே கே எல் ராகுல் பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் மிக முக்கிய பொறுப்பை ஏற்க வேண்டும். தற்போது இருக்கும் வங்கதேச தொடரில் சர்ஃப்ராஸ் கானுக்கு பதில் கே.எல் ராகுலை தான் இந்திய அணி பயன்படுத்தியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய தொடரில் கே எல் ராகுல் போன்ற அனுபவம் நிறைந்த வீரர் வேண்டும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.
ஆஸ்திரேலிய மண்ணில் பேட்டிங் வரிசையில் ஆறாவதாக இறங்கும் போது உங்களுக்கு நல்ல டெக்னிக் இருக்க வேண்டும்.
ஏனென்றால் அந்தக் கட்டத்தில் பேட்டிங்கில் களம் இறங்கும் போது இரண்டாவது புதிய பந்தை எதிர்கொள்ள நேரிடும். இல்லையென்றால் நீங்கள் நினைத்ததை விட விரைவாக பேட்டிங் செய்ய களத்திற்கு வர நேரலாம் என்று ஹனுமா விகாரி கூறியுள்ளார்.