மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வடிவங்களிலும் என்னால் மிகச்சிறப்பாக செயல்பட முடியும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மாவின் இந்த பேட்டியால், அவர் மீண்டும் டி20 கிரிக்கெட்டுக்கு கம்பேக் கொடுப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றிபெற்ற சில மணி நேரங்களிலேயே கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தார். இதனால் ரோஹித் சர்மாவின் கவனம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளது. ரோஹித் சர்மாவுக்கு இன்னும் சில மாதங்களில் 38 வயது தொடங்கவுள்ள நிலையில், அவரால் ஃபிட்னஸ் உடன் தொடர்ந்து பயணிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால் விராட் கோலி, ஜடேஜாவை போல் ரோஹித் சர்மா ஃபிட்னஸ்-க்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டார். தேவைக்கேற்ப உடற்பயிற்சியில் ஈடுபடும் ரோஹித் சர்மா, வயது அதிகரிப்பதை மனதில் வைத்து செயல்பட தொடங்கியுள்ளார். ஓய்வு நாட்களில் கூட இந்திய துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் இணைந்து ஜிம்மில் தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
இதுகுறித்து ரோஹித் சர்மா பேசுகையில், டி20 கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வை அறிவித்ததற்கு ஒரே காரணம், நான் போதுமான நாட்கள் விளையாடிவிட்டேன் என்பது தான். 17 ஆண்டுகளாக டி20 கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறேன். இறுதியாக உலகக்கோப்பையையும் வென்றுவிட்டேன். அதனால் ஓய்வை அறிவிக்க அதுதான் சரியான நேரமாக கருதப்பட்டது. அதேபோல் டி20 கிரிக்கெட்டுக்கு பின் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியதை உணர்ந்து முடிவை எடுத்தேன்.
இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட ஏராளமான திறமையான வீரர்கள் உள்ளனர். என்னால் இந்திய அணிக்காக இப்போதும் 3 வடிவங்களிலும் விளையாட முடியும். அதன் காரணமாக தான், ஃபிட்னஸ் என்பது மனதையும், நம்பிக்கையையும் பொறுத்தது என்று கூறினேன். எனது மூளையையும், மனதையும் தேவையான நேரத்தில் கட்டுப்படுத்த முடியும். அது எளிதான விஷயமில்லை என்றாலும், என்னால் செய்ய முடிகிறது.
இளம் வீரராக இருந்த போது களத்தில் சில வித்தியாசமான விஷயங்கள் நடக்கும். அதேபோல் இளம் வீரராக இருந்த போது அல்ல.. நான் இப்போதும் இளைஞன் தான். இதற்கான தான் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளோம். 10 வயது, 15 வயதாக இருந்த போது, மிகப்பெரிய சேஸிங்கை விரட்டும் போது, எதிரில் இருந்த பார்ட்னர் ஏதாவது திட்டத்தை கூறுவார். அப்போது எனது பதில் ஓகே என்பதாக இருக்கும். ஆனால் மனதில் ஒவ்வொரு பந்தாக எதிர்கொள்வோம் என்பது தான் திட்டமாக வைத்து கொள்வேன்.
இலக்கை பற்றி சிந்திக்காமல், நிஜத்தில் மட்டும் கவனம் செலுத்துவேன். ஏனென்றால் பேட்ஸ்மேன்களிடம் ஒவ்வொரு பந்திலும் பவுலர்கள் பதிலை எதிர்பார்ப்பார்கள். இதுபோன்ற விஷயங்களுக்கு யாராலும் பயிற்சியளிக்க முடியாது. இயற்கையாகவே நமது மனதிற்குள் இதுபோன்ற எண்ணங்கள் வந்துவிடும். கடந்த 17 ஆண்டுகளில் 500க்கும் அதிகமாக போட்டிகளில் விளையாடிவிட்டேன். சர்வதேச கிரிக்கெட்டில் என் அளவிற்கு கூட ஏராளமான வீரர்களால் வர முடியவில்லை.
நீண்ட நாட்கள் கிரிக்கெட்டில் தாக்குபிடிப்பதற்கு நாம் அன்றாட பணிகளும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நமக்கு தேவையான மற்றும் செய்ய வேண்டிய பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். அதுவே ஒரு கட்டத்தில் பழக்கமாகிவிடும். ஃபிட்னஸ், பயிற்சி, ஆட்டத்திற்கு தயாராகுதல் என்பதை எல்லாம் எப்படி கையாள்கிறோம் என்பதும் முக்கியம். எங்களின் பணி என்னவென்றால், 100 சதவிகிதம் கிரிக்கெட்டுக்கு தயாராக இருக்க வேண்டும். அதனால் ஓய்வு நாட்களிலும், போட்டிக்கு தயாராகுவதும் என் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.