மும்பை: டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்திய அணிக்கு ஈடு கொடுத்து வங்கதேசம் அணியால் விளையாட முடியாது என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய நம்பிக்கையுடன் வங்கதேசம் இருந்தாலும், இந்திய அணியை வீழ்த்துவது எளிதல்ல என்று கூறியுள்ளார்.
இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செப்.19ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் நேற்றிரவு சென்னை வந்து சேர்ந்தனர். இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், பும்ரா உள்ளிட்டோர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாமும் சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியுள்ளது. தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் அபிஷேக் நாயர், மோர்னே மோர்கல் உள்ளிட்டோர் இந்திய அணி வீரர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஹோம் சீசனுக்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்றிருப்பது சாதகமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் வங்கதேசம் அணியும் இந்திய அணியை வீழ்த்த தீவிரமாக தயாராகி வருகிறது. சொந்த மண்ணில் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வந்த வங்கதேசம், கடந்த சில ஆண்டுகளில் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இருக்கிறது. அதேபோல் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் கடந்த முறை இந்திய அணி வங்கதேசத்திற்கு சென்று பங்கேற்ற டெஸ்ட் போட்டியில், ஜஸ்ட் மிஸ்ஸில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால் இந்திய அணிக்கு நிச்சயம் வங்கதேசம் அணி சவால் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்தியா - வங்கதேசம் இடையில் 13 டெஸ்ட் போட்டிகள் நடந்திருக்கின்றன.
அதில் 11 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில், வங்கதேசம் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணியை வீழ்த்தியதில்லை. இந்த நிலையில் இந்தியா - வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடர் குறித்து தினேஷ் கார்த்திக் பேசுகையில், இந்திய அணிக்கு ஈடுகொடுத்து வங்கதேசம் அணியால் விளையாட முடியாது என்பதே என் கருத்து.
இந்திய அணியை இந்திய மண்ணில் வைத்து வீழ்த்துவது என்பது மிகப்பெரிய சவால். வங்கதேசம் அணி பாகிஸ்தான் மண்ணில் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பதை மறக்கவில்லை. அதற்காக இந்திய அணியை அசைத்து பார்த்திட முடியாது என்று தெரிவித்துள்ளார். கடைசியாக இந்திய அணி 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் சொந்த மண்ணில் தோல்வியடைந்தது.
அதன்பின் நடந்த அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா அபார வெற்றியை பெற்றுள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்திய அணி வீரர்களுக்கு 43 நாட்கள் தொடர் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள் புதிய உற்சாகத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராகி வருகின்றனர். இதனால் பேட்டிங் மற்றும் பவுலிங் இந்திய அணிக்கு சவால் கொடுப்பது வங்கதேச அணிக்கு எளிதாக இருக்காது.