புனே: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினாலும், தரமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் 17வது லீக் போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷான்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார். புனே மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே அதிக முறை வென்றுள்ளது. இதையடுத்து பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 66 ரன்கள் சேர்த்தார்.

இந்திய அணி தரப்பில் பும்ரா, ஜடேஜா மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 257 ரன்கள் இலக்கை சேஸிங் செய்வதற்காக இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. வங்கதேச அணி தரப்பில் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான சொரிஃபுல் இஸ்லாம் முதல் ஓவரை வீச அழைக்கப்பட்டார். ரோகித் சர்மாவுக்கு இடதுகை பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிக்கல் இருப்பதால், வங்கதேச அணி நம்பிக்கையுடன் தொடங்கியது.
ஆனால் சொரிஃபுல் வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசி ரோகித் சர்மா அதிரடியாக தொடங்கினார். இதனைத் தொடர்ந்து 3வது ஓவரை வீசுவதற்கு மீண்டும் சொரிஃபுல் அழைக்கப்பட, அந்த ஓவரில் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசி தள்ளினார். இதனால் உடனடியாக ஸ்பின்னரை கொண்டு வங்கதேச அணி அட்டாக் செய்தது. ஆனால் ஸ்பின்னரையும் ரோகித் சர்மா விட்டு வைக்கவில்லை. இதனால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
இதன்பின் சுப்மன் கில்லும் அதிரடிக்கு திரும்பிய நிலையில், இந்திய அணியின் ஸ்கோர் 12 ஓவர்கள் முடிவில் 80 ரன்களை எட்டியது. இதன்பின் ஹசன் மஹ்முத் வீசிய 13வது ஓவரின் 3வது பந்தில் சிக்சர் விளாசிய ரோகித் சர்மா, 4வது பந்திலும் சிக்சர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். இதனால் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை ரோகித் சர்மா பறிகொடுத்தார்.
இருப்பினும் ஆசிய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 6 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். அதேபோல் உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மாவின் பேட்டிங் வழக்கத்திற்கு மாறாக அதிரடியாக அமைந்துள்ளது. வழக்கமாக பவர் பிளே ஓவர்களில் நிதானம் காட்டும் ரோகித் சர்மா, தற்போது பவர் பிளே ஓவர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயன்படுத்தி பவுண்டரிகளை விளாசி வருகிறார்.
அதேபோல் எதிர்முனையில் உள்ள வீரரை ஆடவிட்டு பின்னர் அதிரடிக்கு மாறும் பழக்கம் கொண்ட ரோகித் சர்மா, ஜூனியர் வீரரான சுப்மன் கில் மீது அழுத்தம் கொடுக்காமல், தானாக முன் வந்து அழுத்தம் வராமல் பார்த்து கொள்கிறார். இதனால் ரோகித் சர்மா மீண்டும் பழைய ஹிட்மேனாக வந்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.