புனே: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஃபீல்டிங் செய்த ஜடேஜாவுக்கு பதக்கம் வழங்கப்பட்ட போது, பயிற்சியாளர் திலீப் கொடுத்த சர்ப்ரைஸ் இந்திய வீரர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஃபீல்டிங் சிறப்பாக அமைந்துள்ளது. இதற்கு பயிற்சியாளர் டி திலீப் கொடுக்கும் பயிற்சி மட்டுமல்லாமல், சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு அவர் பதக்கமும் முக்கிய காரணமாக உள்ளது. ஒவ்வொரு போட்டிக்கு பின்னரும் சிறந்த ஃபீல்டருக்கு திலீப் பதக்கம் வழங்கி வருகிறார்.

அந்த வகையில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறப்பாக ஃபீல்டிங் செய்தனர். இதன் மூலமாக 13 ரன்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பதக்கத்தை அளிப்பதற்கு முன்பாக பயிற்சியாளர் டி திலீப் மூவரையும் அனைத்து வீரர்கள் முன்னிலையிலும் வைத்து பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து ஜடேஜாவை பாராட்டும் போது களத்தில் சிங்கம் போல் பாய்ந்து ரன்களை கட்டுப்படுத்தியதாகவும், டேரட் ஹிட் சிறப்பாக அடித்ததாகவும், அபாரமாக பாய்ந்து கேட்ச் பிடித்ததாகவும் கூறினார். அதேபோல் கேஎல் ராகுல், ரோகித் சர்மாவை போல் களத்தில் நிதானமாக இருந்து ஃபீல்டிங் அசத்தி வருவதாகவும் பாராட்டினார்.

இதன்பின் இருவரில் யாருக்கு பதக்கம் என்று வீரர்கள் எதிர்பார்ப்புடன் இருந்த போது, திடீரென வெற்றியாளரை யார் என்பதை அறிந்துகொள்ள மைதானத்தை பார்க்குமாறு திலீப் தெரிவித்தார். இதனால் ஆச்சரியமடைந்த இந்திய வீரர்கள் அனைவரும் வேகமாக கண்ணாடி வழியாக மைதானத்தில் பார்க்க, அப்போது காலியான மைதானத்தில் இருந்த எல்இடி ஸ்கிரீனில் ஜடேஜாவின் புகைப்படமும், அவர் கேட்ச் பிடித்த வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது.
இதனால் ஆச்சரியமடைந்த இந்திய வீரர்கள் குடும்பம் போல் ஒன்றாக கத்தி கொண்டாட, கேஎல் ராகுல் கைகளில் பதக்கம் அளிக்கப்பட்டு அவரின் கைகளால் ஜடேஜாவுக்கு அணிவிக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த ஜடேஜா, அந்த பதக்கத்தை மீண்டும் பயிற்சியாளரின் கழுத்தில் அணிவித்து கொண்டாடினார். இந்த வீடியோ ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.