2019 உலகக்கோப்பை தோல்வி
2019 உலகக்கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது இந்திய அணி. ஆனால், அந்த தொடரில் இந்தியா அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியது. நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது.
டி20 உலகக்கோப்பை
அதனால், கடும் விமர்சனத்தை சந்தித்த இந்திய அணி அடுத்து 2020 டி20 உலகக்கோப்பை தொடருக்கு இப்போது இருந்தே தயாராகி வருகிறது. அதற்காக அணியில் இளம் வீரர்களை பட்டை தீட்ட துவங்கி உள்ளது இந்திய அணி.
சேஸிங்கில் கில்லி
அதோடு, இந்திய அணியின் பலம் - பலவீனம் குறித்த ஆய்வு செய்து, இந்திய அணி டி20 போட்டிகளில் இந்திய மண்ணில் ஆடினாலும், வெளிநாடுகளில் ஆடினாலும் சேஸிங்கில் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், முதலில் பேட்டிங் செய்தால் தான் தடுமாறுகிறது. எனவே, அதை சரி செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளது இந்திய அணி.
முதலில் பேட்டிங்
எனவே, இனி வரும் டி20 போட்டிகளில் முடிந்த அளவு முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற வித்தியாசமான முடிவை எடுத்துள்ளது இந்திய அணி. எந்த அணியாக இருந்தாலும் ஒவ்வொரு போட்டியிலும் எப்படி வெற்றி பெறுவது என்பதை தான் திட்டமிடும்.
டாஸ் வென்றால்..
ஆனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் டி20 போட்டிகளை அணுகி வருகிறது. இந்தியா டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்யும் என்பது கிட்டத்தட்ட உறுதியான முடிவாக மாறி உள்ளது.
தென்னாப்பிரிக்கா தொடர்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரின் இரண்டாம் போட்டியில் இந்தியா டாஸ் வென்றும், ஆடுகளம் சேஸிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருந்தும், இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
தோல்வி அடைந்தது
அந்தப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அதனால், தென்னாப்பிரிக்கா டி20 தொடர் 1 - 1 என சமனில் முடிந்தது. அப்படி இருந்தும் கேப்டன் கோலி தன் முடிவில் திட்டவட்டமாக இருந்தார்.
அதே திட்டம்
இப்போது வங்கதேச தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டாலும், அவரும் முதலில் பேட்டிங் செய்யும் முடிவையே எடுப்பார் என பேட்டியில் கூறி இருக்கிறார். வங்கதேச தொடரின் முதல் டி20 போட்டிக்கு முன் அளித்த பேட்டியில் ரோஹித் இதை கூறினார்.
ரோஹித் என்ன சொன்னார்?
ரோஹித் கூறுகையில், கடினமான ஆடுகளங்களில் நல்ல டார்கெட் வைத்து, வெற்றி பெற முயற்சி செய்வோம். ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு முன் அனைத்து விதங்களிலும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.
தோல்வி அடைந்தாலும்..
தோல்வி அடைந்தாலும் இந்த பரிசோதனை முயற்சியை இந்தியா தொடர இருக்கிறது. இந்த திட்டத்தை விராட் கோலி, ரவி சாஸ்திரி மற்றும் புதிய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோர் இணைந்து முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இது இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுக்குமா?