கான்பூர்: வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்று துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்திய அணி வீரர்களுக்கு பேட்டிங் செய்ய கடினமான பிட்சை தயார் செய்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை கான்பூர் மைதானத்தில் நடக்கவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று வங்கதேசம் அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் துணைப் பயிற்சியாளரான அபிஷேக் நாயர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அபிஷேக் நாயர் பேசுகையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் இருப்பார்கள் என்பதை சொல்ல முடியாது. ஆனால் இந்திய அணியின் அனைத்து வீரர்கள் விளையாட தயாராக இருக்கின்றனர். ஏனென்றால் எந்த பிட்சில் விளையாட உள்ளோம் என்பது எங்களுக்கு தெரியாது.
பிட்சை பார்த்த பின்னர் தான் பிளேயிங் லெவன் மற்றும் டீம் காம்பினேஷனை முடிவு செய்வோம். அதேபோல் கடந்த சில ஆண்டுகளில் கான்பூர் பிட்ச் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது. நாளை வானிலையில் அதிக வெப்பம் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சியின் போதே கடினமான பிட்ச்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
நிச்சயம் முதல் டெஸ்ட் போட்டியை விடவும் மிகச்சிறந்த ஆட்டத்தை கேஎல் ராகுல் வெளிப்படுத்துவார் என்று நம்புகிறோம். இந்திய அணியில் துணைக் கேப்டன் இல்லை என்பது பிரச்சனையில்லை. ஏனென்றால் ஏராளமான ஐபிஎல் கேப்டன்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், கான்பூர் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.