சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸிலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளார். தொடர்ச்சியாக வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 5வது முறையாக மோசமான ஆட்டத்தை ரோஹித் சர்மா வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் அபார ஆட்டத்தால் 376 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய வங்கதேசம் அணி பும்ராவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபாலோ ஆன் கொடுக்க மறுத்து 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்பின் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. வழக்கம் போல் ஜெய்ஸ்வால் பவுண்டரியுடன் தொடங்க, மறுபக்கம் ரோஹித் சர்மாவும் அசத்தலான ஒரு பவுண்டரியுடன் தொடங்கினார்.
இதனால் பெரிய ஸ்கோரை ரோஹித் சர்மா அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டஸ்கின் அஹ்மத் வீசிய பந்தை ரோஹித் சர்மா டிஃபென்ஸ் ஆட, அது எட்ஜாகி நேராக 3வது ஸ்லிப் திசையில் நின்றிருந்த ஜாகீர் ஹசனின் கைகளில் விழுந்தது. இதனால் ரோஹித் சர்மா வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் சேப்பாக்கம் மைதானமே அமைதியானது.
முதல் இன்னிங்ஸில் எப்படி ஹசன் மஹ்முத் பவுலிங்கில் ஸ்விங்கில் ஏமாந்து ரோஹித் சர்மா விக்கெட்டை கொடுத்தாரோ, அதேபோல் 2வது இன்னிங்ஸிலும் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். டஸ்கின் அஹ்மத் வீசிய பந்தை கட்டாயம் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ரோஹித் சர்மா தள்ளப்பட்டார் என்பதே மட்டுமே ஒரு மாற்றம். ஏனென்றால் அந்த பந்து சரியான லெந்தில் பிட்சாகி ரோஹித் சர்மா உடலை நோக்கி வந்தது.
இதன் மூலமாக வங்கதேசம் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து 5வது முறையாக ரோஹித் சர்மா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதற்கு முன்பாக வங்கதேசம் அணியுடன் விளையாடிய போட்டிகளில் 6, 6, 21 ஆகிய ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். தற்போது இந்த போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் 6 மற்றும் 5 ரன்களில் ஆட்டமிழந்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.