சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவனை தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார். இந்திய அணிக்கு சீனியர் வீரர்கள் திரும்பியிருப்பதால், இளம் வீரர்கள் 2 பேரும் காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சி முகாமில் ஈடுபட்டு தயாராகியுள்ளனர். நீண்ட ஓய்வுக்கு பின் நேரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்குவதால், இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் வங்கதேசம் அணியை பொறுத்தவரை பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள் சிறிது எச்சரிக்கையுடன் சேப்பாக்கம் மைதானத்தில் வங்கதேசம் அணியை எதிர்கொள்ள வேண்டும் என்று சில அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கம்பீர் பேசுகையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படவில்லை. நாங்கள் பிளேயிங் லெவனை சரியாக தேர்வு செய்ய வேண்டும் என்று பார்க்கிறோம். துருவ் ஜுரெல் மிகச்சிறந்த பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
ஆனால் ரிஷப் பண்ட் கம்பேக் கொடுப்பதால், சில வீரர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. அதேபோல் இது சர்ஃபராஸ் கானுக்கும் பொருந்தும். நிச்சயம் அவர்களுக்கான வாய்ப்பு வரும். அதுவரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். ரிஷப் பண்ட் எவ்வளவு சிறந்த அட்டாக்கிங் வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் மூலமாக அவர் என்னவெல்லாம் செய்துள்ளார் என்பதையும் பார்த்திருக்கிறோம்.
ரிஷப் பண்ட் வயதில் உள்ள பலரும் அவர் செய்த விஷயங்களை செய்ததில்லை. அதுவும் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு பிட்ச்களில் செய்துள்ளார். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் ரிஷப் பண்ட் அட்டகாசமான வீரர் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக நாளைய ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் துருவ் ஜுரெல் மற்றும் சர்ஃபராஸ் கான் இடம்பெற வாய்ப்பில்லை என்று உறுதியாகியுள்ளது.
கிட்டத்தட்ட 21 மாதங்களுக்கு பின் ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பவுள்ளார். அதேபோல் தென்னாப்பிரிக்கா மண்ணில் சிறப்பாக செயல்பட்ட கேஎல் ராகுல், இங்கிலாந்து தொடரில் காயம் காரணமாக விலகினார். அவரும் இந்த டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ளார். அதேபோல் 2வது குழந்தை பிரசவம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிய விராட் கோலி, இந்த தொடரில் கம்பேக் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நெருங்கியுள்ளதால், சீனியர் வீரர்கள் அனைவரும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி ஃபார்மை மீட்டெடுப்பதே அவர்களின் முதன்மை நோக்கமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. மேலும், நாளை எந்த வேகப்பந்துவீச்சாளர்கள் கூட்டணி இந்திய அணிக்காக களமிறங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான யாஷ் தயாள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதால், சில சந்தேகங்கள் எழுந்துள்ளன.