சென்னை: இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை புரிந்து கொண்டு அவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்தி கொள்வதே நோக்கம் என்று பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் பலம், பலவீனம் ஆகியவற்றை அறிந்து அதற்கேற்ப செயல்பட்டு இலக்கை எட்டுவதே திட்டம் என்றும் கூறியுள்ளார்.
இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் மோர்னே மோர்கல் பணியை தொடங்கியுள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் சென்னை வந்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணிக்கு 5 நாட்கள் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி, அஸ்வின், பும்ரா, ஜடேஜா, கேஎல் ராகுல் என்று அனைத்து சீனியர் வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த பயிற்சி முகாமில் இந்திய வீரர்கள் மோர்னே மோர்கல் பங்கேற்றுள்ளார். இதற்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மோர்னே மோர்கல், கடந்த உலகக்கோப்பை தொடருக்கு பின் பொறுப்பில் இருந்து விலகினார். லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மோர்கல், தற்போது இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக பணியாற்றிய போது, மோர்னே மோர்கல் உடன் கம்பீருக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. அதற்கு முன்பாக இருவரும் நல்ல நண்பர்கள் என்றாலும், மோர்கலின் பணியை பார்த்து கம்பீர் அசந்து போயுள்ளார். இதனால் மோர்கலை தன்னுடன் அழைத்து வந்திருக்கிறார். இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது மோர்கலின் தந்தைக்கு உடல்நிலை பிரச்சனையில் இருந்தால், இந்திய அணியுடன் பயணிக்க முடியவில்லை.
தற்போது வங்கதேச டெஸ்ட் தொடருக்கான பயிற்சி முகாமில் இருந்து மோர்னே மோர்கல் பணியை தொடங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. முதல் நாள் பயிற்சி முகாம் முடிவடைந்த நிலையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை பார்த்து மோர்கல் ஆச்சரியமடைந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மோர்கல் பேசுகையில், இதுதான் எனது முதல் நாள் பணி. அதனால் இந்திய அணி வீரர்களை அறிந்து கொள்வது தான் நோக்கமாக இருந்தது.
இந்திய அணியின் சில வீரர்களுக்கு எதிராக விளையாடி இருக்கிறேன். சிலருடன் ஐபிஎல் தொடரின் போது பழகியிருக்கிறேன். தற்போது இந்திய அணியுடன் சேர்ந்து பயணிப்பதால், அவர்களுடன் நல்ல உறவில் இருப்பது அவசியமாகும். அதனால் முதல் நாளிலேயே அவர்களின் மனநிலையையும், திட்டங்களையும் புரிந்து கொள்வது தான் நோக்கமாக இருந்தது. அவர்களின் வலிமை, சிக்கல்களை புரிந்து கொண்டு ஒவ்வொரு தொடருக்கும் ஏற்ப இலக்கு நிர்ணயித்து செயல்பட விரும்புகிறேன்.
இந்திய அணியின் பவுலர்களின் தயாரிப்பு பணிகள் ஆச்சரியமாக உள்ளது. இதை மிகச்சிறந்த விஷயமாக நினைக்கிறேன். இந்த இடத்தில் இருந்து அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நட்சத்திர வீரர் ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். துலீப் டிராபியில் சிறப்பாக செயல்பட்ட யாஷ் தயாள், இந்திய அணியின் ஒரே இடதுகை வேகப்பந்துவீச்சாளர்.