கான்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின், இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான ஆகாஷ் தீப் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு சென்று தரிசனம் மேற்கொண்டுள்ளார். மேலும், கடவுளிடம் தான் எப்போதும் எந்த வேண்டுதலும் வைக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 233 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 34.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது டிக்ளேர் செய்தது.

இதன்பின் களமிறங்கிய வங்கதேச அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி 98 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. வெறும் 6 இன்னிங்ஸ்களில் இந்த ஆட்டம் முடிவடைந்தது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் 2 நாட்கள் இருந்த போதும் இந்திய அணி ரிஸ்க் எடுத்து ஆடிய ஆட்டம் வரலாற்று பதிவாகவே மாறியுள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஒரு பக்கம் பும்ரா விக்கெட் வீழ்த்துவதற்கு ஏதுவாக மறுபக்கம் ஆகாஷ் தீப் கட்டுக்கோப்பாக பவுலிங் செய்தார். பேக் ஆஃப் தி லெந்தில் பவுலிங் செய்யக் கூடிய பவுலராக ஆகாஷ் தீப் இருப்பதால், எதிர்காலத்திற்கான வீரராக இருப்பார் என்று கணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கான்பூரில் வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் நேராக அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலுக்கு சென்று தரிசனம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து ஆகாஷ் தீப் பேசுகையில், ராமரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற கனவு நீண்ட மாதங்களாகவே எனக்குள் உள்ளது.
அயோத்தியில் கோயில் திறக்கப்பட்ட போதே வர வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகள் இருந்ததால், வர முடியவில்லை. இன்று ராமரை தரிசித்த போது, முதல்முறையாக பார்ப்பது போல் இல்லை. ஏற்கனவே பார்த்ததை போல் உள்ளது. ராமரின் உருவம் ஒரு புகைப்படமாகவே மனதிற்குள் பதிந்துள்ளது. தற்போது நேரில் தரிசனம் மேற்கொண்டதால் மனம் அமைதியாக உள்ளது.
தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி, ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அதுதான் என்னுடைய வேண்டுதல். எப்போது வேண்டுதல் வைக்கும் பழக்கம் எனக்கு கிடையாது. ஏனென்றால் கடவுள் அனைத்தையும் பார்த்து கொள்வார். தற்போது இந்திய அணி 3 வடிவங்களிலும் ஆதிக்கம் செலுத்துவது போல், வரும் காலங்களிலும் ஆதிக்கத்தை தொடர வேண்டும்.
சச்சின் டெண்டுல்கர் தான் எனது ஃபேவரைட் வீரர். அவரது பாணியில் எனது இலக்கை என்னவென்றால் எளிய வாழ்க்கையை வாழ வேண்டும்.. கடினமாக உழைப்பதற்கான மன உறுதியுடன் இருக்க வேண்டும். அதற்கான பலன் கிடைப்பதை கடவுள் பார்த்து கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.