லண்டன்: இங்கிலாந்து அணியின் பேஸ்பால் ஸ்டைலை இந்திய அணி காப்பிடியடித்துள்ளதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கில் வாஹன் விமர்சித்துள்ளார். பேஸ்பால் ஸ்டைலுக்கும் கவுதம் கம்பீரின் ஸ்டைலுக்கும் ஏராளமான ஒற்றுமையை பார்ப்பதாகவும் கூறி இந்திய ரசிகர்களின் எதிர்ப்பை பெற்றுள்ளார்.
வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 34.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன்பின் களமிறங்கிய வங்கதேசம் அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்ததால், இந்திய அணி கடைசி நாளின் 2வது செஷனிலேயே எளிதாக வெற்றியை பெற்றது.

இரண்டரை நாட்கள் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட போதும், இந்திய அணி வெற்றிபெற்றது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. என்ன நடந்தாலும் போட்டியில் முடிவை கொண்டு வர வேண்டும் என்பதில் இந்திய அணி பிடிவாதமாக இருந்தது. அதேபோல் முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி எடுத்த ரிஸ்க், இந்திய அணிக்கு பலனளித்தது.
இதுகுறித்து ரோஹித் சர்மா பேசுகையில், வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் மழையால் ஆட்டம் இரண்டரை நாட்கள் ரத்து செய்யப்பட்ட போது, போட்டியை எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து சிந்தித்தோம். 4வது நாளில் ஆட்டம் தொடங்கிய போது, வங்கதேச அணியை விரைந்து ஆல் அவுட் செய்ய வேண்டும் என்பதே முதல் இலக்காக இருந்தது.
அதன்பின் பேட்டிங்கில் என்ன செய்யலாம் என்று ஆலோசித்தோம். அதேபோல் எங்களுக்கு ரன்கள் எடுப்பதை விடவும் ஓவர்கள் அதிகமாக தேவைப்பட்டது. ஏனென்றால் 2வது இன்னிங்ஸில் அவர்களை மீண்டும் ஆல் அவுட் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் பேட்ஸ்மேன்கள் ரிஸ்க் எடுப்பதை பற்றி கவலைப்படவில்லை. அதனால் போட்டியில் முடிவை கொண்டு வர வேண்டும் என்று கவனம் செலுத்தியதாக தெரிவித்தார்.
இதனால் ரோஹித் சர்மா - கவுதம் கம்பீர் கூட்டணி சிறப்பாக தொடங்கியுள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கில் வாஹன் பேசுகையில், கம்பீரின் ஸ்டைலுக்கும் பேஸ்பாலுக்கு ஏராளமான ஒற்றுமை இருக்கிறது. இந்தியா - வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்டின் 4வது நாள் ஆட்டத்தை பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் தான், இங்கிலாந்து அணி பேஸ்பால் விளையாடுகிறது என்று பதிவிட்டேன்.
ஏனென்றால் பேஸ்பால் ஸ்டைலின் உரிமையாளர் யார் தெரியுமா? இதற்காக இங்கிலாந்து அணி இந்திய அணியிடம் கட்டணம் வசூலிக்குமா என்று தெரியாது. ஆனால் இந்த டெஸ்ட் போட்டி மகத்தான ஒன்றாகும். இந்திய அணி என்ன செய்தாலும், மிகச்சிறப்பாக இருக்கிறது. இந்திய அணி தற்போது பேஸ்பால் ஸ்டைலை விளையாடுவது பெருமையாக உள்ளது. 34.4 ஓவர்களில் 285 ரன்கள் எடுத்ததன் மூலமாக இங்கிலாந்து அணியை காப்பியடித்துள்ளார்கள் என்று விமர்சித்துள்ளார். இதனால் இந்திய ரசிகர்கள் ரிஷப் பண்ட், சேவாக் யார் என்று தெரியுமா என்று கேட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர்.