கான்பூர் : வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பல்வேறு ரெக்கார்டுகளை படைத்திருக்கிறது. வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 233 ரன்கள் எடுக்க இரண்டு நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டதால் இந்த போட்டியில் எப்படியாவது முடிவை எட்ட வேண்டும் என்ற நோக்கில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டுமென்றால் முதல் இன்னிங்ஸில் பெரிய இலக்கை நிர்ணயித்து விட்டு பின் வங்கதேசத்தை பேட்டிங் செய்ய பணிக்க வேண்டும். இதனால் இந்திய வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக ரன்களை குவித்து வருகிறார்கள்.

குறிப்பாக கேஎல் ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவை இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சர்பராஸ் கானுக்கு பதில் ராகுல் சேர்க்கப்பட்ட போது பல விமர்சனங்கள் எழுந்தது. கே எல் ராகுல் பெரிய இன்னிங்ஸ் ஆடுவது இல்லை என்றும் அவர் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை தற்போது விளையாடுவதில்லை என்றும் பல விமர்சனங்கள் இருந்தது.
ஆனால் இன்று தான் யார் என்பதை கேஎல் ராகுல் ரசிகர்களுக்கு காட்டி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நடு வரிசையில் களமிறங்கிய கேஎல் ராகுல் இன்று அதிரடியாக ஆடி ரன்களை சேர்க்க வேண்டும் என்ற கட்டத்தில் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது போல் பட்டையை கிளப்பினார்.
ராகுல் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க 33 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதம் அடித்த ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமை கேஎல் ராகுலுக்கு கிடைத்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பண்ட் பெற்றிருக்கிறார்.28 பந்துகளில் பண்ட் அரை சதம் அடிக்க கபில் தேவ் 30 பந்துகளின் அரை சதம் அடித்தார்.
ஜெய்ஸ்வால் 31 பந்துகளிலும், சர்துல் தாக்கூர் 31 பந்துகளிலும் சேவாக் 32 பந்துகளிலும், கே.எல். ராகுல், இசான் கிஷன் ஆகியோர் 33 பந்துகளிலும் அரை சதம் அடித்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக கேஎல் ராகுலை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் விமர்சித்து வந்த நிலையில் தற்போது முக்கியமான கட்டத்தில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி இருக்கிறார்.