பெங்களூர் : 2024 ஆம் ஆண்டில் மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக கருதப்படும் இந்தியா ஆஸ்திரேலியா மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இதை அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும்.

பெங்களூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸிலும் பவுலர்கள் இரண்டு இன்னிங்ஸிலும் கடுமையாக தடுமாறினர். இந்த சூழலில் ஷமி காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இந்த நிலையில் பெங்களூரில் தங்கி பயிற்சி செய்து வந்த ஷமியை இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் அழைத்து பந்து வீசக்கூறியிருக்கிறார்.
அபிஷேக் நாயர் பேட்டிங் செய்து ஷமி எவ்வாறு பந்து வீசினார் என்பதை கண்டு கொண்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷமி, காயத்திலிருந்து மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறேன். தற்போது எனக்கு காலில் வலி இல்லை. பயிற்சியில் நான் கொஞ்சம் தூரம் ஓடி வந்து தான் பந்து வீசினேன். ஏனென்றால் என்னுடைய உடம்பில் நான் பெரிய அளவில் அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை.
ஆனால் நேற்று நான் முழுவீச்சில் பந்துவீச்சில் ஈடுபட்டேன். என்னுடைய 100 சதவீத பங்களிப்பை கொடுத்தேன். பந்துவீசி முடித்தவுடன் என்னுடைய உடல் தகுதி நல்ல நிலையில் இருந்தது. நான் இந்திய அணிக்கு திரும்பும் பாதையில் சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றேன். நான் 100% உடல் தகுதியை பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
ஆஸ்திரேலியா தொடருக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கிறது. அதற்குள் நான் உடல் தகுதியில் தேர்ச்சி பெற வேண்டும். என்னால் எப்போது பயிற்சியில் ஒரே நாளில் 20 அல்லது 30 ஓவர்கள் வீச முடிகிறதோ, அப்போது மருத்துவர்கள் என்னை சோதித்து போட்டிக்கு தயார் என்று சான்றிதழ் அளிப்பார்கள். அதன்பிறகு நான் ரஞ்சி கோப்பையில் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் விளையாட திட்டமிட்டு இருக்கிறேன். அதில் என்னுடைய உடல் தகுதியும் பார்மையும் உறுதி செய்துவிட்டு பின் ஆஸ்திரேலிய தொடரில் பங்கு பெறுவேன்.
காயத்திலிருந்து மீண்டு வரும் போது பொறுமை மிகவும் முக்கியம். நாம் என்னடா வாழ்க்கை என்று வெறுத்து விடக்கூடாது. அதற்கு பதில் பொறுமையாக இருந்து சாதிக்க வேண்டும். முன்பெல்லாம் எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீச தடுமாறுவார்கள். ஆனால் இப்போது இருக்கும் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுமே 145 கிலோ மீட்டர் வேகத்திற்கு பந்து வீசக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
நமது வேகப்பந்துவீச்சாளர்கள் முன்பு எல்லாம் ஆக்ரோஷமாக இருக்க மாட்டார்கள். ஆனால் தற்போது நிலைமை அப்படி அல்ல. எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு பயத்தை கொடுக்கக்கூடிய வகையில் பவுலர்கள் இருக்கின்றோம். எங்களிடம் வாலை ஆட்டினால் எப்படி திருப்பி தருவது என்று எங்களுடைய தலைமுறையினருக்கு நன்கு தெரியும் என்று ஷமி கூறியிருக்கிறார்.