சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில், போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது நடுவர்கள் ஸ்பின்னர்கள் மட்டுமே பவுலிங் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறிய போது, முகமது சிராஜ் ஸ்பின் பவுலிங் செய்ய தயார் என்று கூறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. வங்கதேசம் அணியின் வெற்றிக்கு இந்திய அணி 515 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், 3வது நாளில் வங்கதேசம் அணி நன்றாக விளையாடியது. தொடக்க வீரர்களான ஜாகீர் ஹசன் - ஷத்மான் இஸ்லாம் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

நிதானமாக விளையாடி வந்த ஜாகீர் ஹசன் 33 ரன்களில் ஜெய்ஸ்வாலின் அபார கேட்ச்சால் ஆட்டமிழந்தார். இதன்பின் வங்கதேசம் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அஸ்வினின் சுழலில் சிக்கி அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். ஷத்மான் இஸ்லாம் 35 ரன்களிலும், மோமினுல் ஹக் மற்றும் முஷ்ஃபிகுர் ரஹிம் இருவரும் தலா 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் கேப்டன் ஷான்டோ ஒருமுறையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷான்டோ - ஷகிப் அல் ஹசன் கூட்டணி நிதானமாக ஆடி வந்த போது, போதிய வெளிச்சம் இல்லாததால் மைதானத்தின் அனைத்து லைட்-களும் போடப்பட்டன. அப்போது கேப்டன் ரோஹித் சர்மா வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜை அட்டாக்கில் கொண்டு வந்தார்.
2 பந்துகளை சிராஜ் வீசிய நிலையில், வங்கதேசம் பேட்ஸ்மேன்கள் வெளிச்சம் போதவில்லை என்று நடுவர்களிடம் கூறினர். இதனால் நடுவர் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் ஸ்பின்னர்களுக்கு மட்டுமே பவுலிங் செய்ய அனுமதிப்போம் என்று கூறினார். ஆனால் ரோஹித் சர்மா வேகப்பந்துவீச்சாளரை தான் பயன்படுத்துவேன் என்று பிடிவாதமாக இருந்தார்.
இதனிடையே நடுவர் ஸ்பின்னருக்கு தான் அனுமதி என்று கூறிய போது, முகமது சிராஜ் உடனடியாக மீதமுள்ள அந்த ஓவரின் 4 பந்துகளையும் சுழற்பந்துவீச்சாளராக வீசுவதற்கு தயாராகினார். அதற்கு சுப்மன் கில்லும் ஆதரவு கூற, இந்திய வீரர்கள் ஜாலியாக உரையாடினர். ஆனால் ரோஹித் சர்மா சிராஜை ஸ்பின்னராக பவுலிங் செய்ய அனுமதிக்கவில்லை.
சில வாரங்களுக்கு இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது, போதிய வெளிச்சம் இல்லாததால் நடுவர் ஸ்பின்னருக்கு மட்டுமே பவுலிங் செய்ய அனுமதி என்று கூறினார். அப்போது உடனடியாக வேகப்பந்துவீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் ஸ்பின்னராக மாறி பவுலிங் செய்தது குறிப்பிடத்தக்கது.