புனே: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா குறித்து கேப்டன் ரோகித் சர்மா அப்டேட் தெரிவித்துள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சார்பாக லிட்டன் தாஸ் 66 ரன்கள் சேர்த்து அசத்தினார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா, பும்ரா மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 97 பந்துகளில் 103 ரன்களும், சுப்மன் கில் 53 ரன்களும் எடுத்தனர். இதன் மூலமாக இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றுள்ளது.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், இது மிகச்சிறந்த வெற்றி. இதுபோன்ற வெற்றியை தான் பெற நினைத்தோம். இன்றைய ஆட்டத்தில் பவுலிங்கின் போது எங்களுக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. ஆனால் பவுலர்கள் மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்கள் வங்கதேச பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினர். அதேபோல் எங்களின் ஃபீல்டிங், 4 போட்டிகளிலும் சிறப்பாக அமைந்துள்ளது. எங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஃபீல்டிங்கில், நாங்கள் சிறப்பாக இருக்கிறோம்.
அதேபோல் எந்த லைன் மற்றும் லெந்தில் வீச வேண்டும் என்பதில் பவுலர்கள் ஸ்மார்ட்டாக இருக்கிறார்கள். பந்துவீச்சிலும், ஃபீல்டிங்கிலும் ஜடேஜா கில்லியாக உள்ளார். அணியாக நாங்கள் சிறப்பாக விளையாடுகிறோம். ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு பதக்கம் வழங்குவது அனைவருக்கும் உத்வேகம் கொடுத்துள்ளது.
ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரை பெரிதாக எந்த கவலையும் தேவையில்லை. நாளை காலை அவரின் நிலைமையை அறிந்த பின், அதற்கேற்ப திட்டமிடுவோம். இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் அழுத்தத்தில் இருந்துள்ளோம். ரசிகர்கள் எங்கு சென்றாலும் ஆதரவளிக்கிறார்கள். இதுவரை எந்த மைதானத்திலும் ரசிகர்கள் ஏமாற்றியதில்லை. அவர்களின் கரகோஷம் அதிகரித்து கொண்டே இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.