மும்பை: இந்திய அணியில் யார் ஃபிட்டான கிரிக்கெட் வீரர் என்ற கேள்விக்கு நட்சத்திர வீரர் ஜஸ்பிரிட் பும்ரா அளித்துள்ள பதில் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் பும்ராவின் பதில் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக இருப்பதால், பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு மும்பை பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்புக்கு பின் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் விராட் கோலி பேசுகையில், இந்தியாவின் பொக்கிஷமாக பும்ராவை மத்திய அரசு அறிவிப்பதற்கான கோரிக்கை எழுந்தால், அந்த கோரிக்கையில் கையெழுத்திடம் முதல் நபர் நானாக தான் இருப்பேன்.

பும்ரா ஒரு தலைமுறைக்கான பவுலர். ஒருமுறை அல்ல.. இரு முறை அல்ல.. ஒவ்வொரு முறையும் இந்திய அணி பின் தங்கிய போதும், மீண்டு வருவதற்கு காரணமாக பும்ரா தான் இருந்தார். இதனால் பும்ராவை பாராட்ட விரும்புகிறேன் என்று தெரிவித்தார். இதன்பின் இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பும்ரா சிறந்த விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில் சென்னையில் நடந்த விழாவில் பும்ராவிடம், நீங்கள் பவுலிங் செய்வதற்கு கடினமாக உணரும் பேட்ஸ்மேன் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பும்ரா, எந்த பேட்ஸ்மேனையும் அவமரியாதை செய்யும் நோக்கம் கிடையாது. ஆனால் எந்த வீரரின் பெயரையும் பதிலாக கூறி, எனது மூளைக்குள் நானே எந்த சிக்கலையும் ஏற்படுத்தி கொள்ள விரும்பவில்லை. அதனால் எந்த பேட்ஸ்மேனின் பெயரையும் சொல்ல போவதில்லை என்று சாமர்த்தியமாக பதிலளித்தார்.
அதேபோல் சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் விளையாடியதில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு, தோனி, விராட் கோலி, பும்ரா என்று அனைவரும் சிறந்த கேப்டன்கள் தான். ஒவ்வொருவரிடமும் நான் ஒவ்வொரு விஷயத்தை சிறப்பாக பார்க்கிறேன். ஆனால் எனது கேப்டன்சியில் நான் விளையாடியதையே விரும்புகிறேன். அதனால் என்னை பொறுத்தவரை நானே சிறந்த கேப்டன் என்று பதிலளித்தார்.
அந்த வகையில் தற்போது பும்ரா பேசிய வீடியோ ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. அதில் தொகுப்பாளர் இந்திய அணியில் யார் ஃபிட்டஸ்ட் கிரிக்கெட்டர் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பும்ரா, நீங்கள் அனைவரும் எந்த பதிலை எதிர்பார்க்கிறீர்கள் என்று எனக்கு புரிகிறது. ஆனால் நான் என்னையே தேர்வு செய்வேன். ஏனென்றால் நானும் வேகப்பந்துவீச்சாளராக தொடர்ந்து விளையாடி வருகிறேன்.
ஒரு வேகப்பந்துவீச்சாளராக இந்தியா போன்ற வெப்பம் மிகுந்த ஆடுகளங்களில் விளையாடுவது சாதாரண விஷயமல்ல. அதற்கு ஏராளமான விஷயங்களை செய்ய வேண்டும். அதனால் நான் வேகப்பந்துவீச்சாளர்களை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பும்ராவின் பதில்கள் முதிர்ச்சியுடன், சாதுர்யமானதாக இருந்து வருகிறது.
அதேபோல் ரசிகர்கள் நட்சத்திரங்களை மட்டும் பார்க்காமல், தன்னை போன்ற சிறந்த வீரர்களையும் கண்டு உணர வேண்டும் என்றும் மறைமுகமாக அறிவுறுத்தி வருகிறார். அதேபோல் ரோஹித் சர்மாவுக்கு பின் அடுத்த டெஸ்ட் கேப்டனுக்கான ரேஸில் பும்ரா இருப்பதால், அதற்குரிய முதிர்ச்சியையும் மைக் முன்பாக வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.