மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவுடன் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியிருக்கிறது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி 74.24 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் மிகப்பெரிய காரணமாக இருக்கிறார். பேட்டிங்கில் சதம் என இந்த தொடரில் 114 ரன்கள் எடுத்த அஸ்வின் பந்துவீச்சில் மொத்தமாக 11 விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார்.

இதன் மூலம் தொடர் நாயகன் விருதை அஸ்வின் கைப்பற்றி இருக்கிறார். விருது வென்ற பிறகு பேசிய அஸ்வின், உண்மையை சொல்ல வேண்டுமென்றால் என் அணியின் வெற்றிக்காக நான் பங்காற்றியதை நினைத்து பெருமை கொள்கின்றேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அடிப்படையாகக் கொண்டால் இந்த வெற்றி எங்களுக்கு மிகப்பெரியதாகும்.
இந்த ஆட்டம் சமனில் முடிவடைந்து இருக்க வேண்டியது, ஆனால் எங்களுடைய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். முதல் இன்னிங்சில் வங்கதேசத்தை நாங்கள் சுருட்டிய பிறகு ரோகித் சர்மா எங்களிடம் உத்வேகத்துடன் உரையாற்றினார். இதன் மூலம் வெற்றிக்காக விளையாட வேண்டும் என்ற உத்வேகம் எங்களுக்கு கிடைத்தது. அது மட்டுமல்லாமல் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து மற்ற வீரர்கள் எப்படி விளையாட வேண்டும் என்று செயல்படுத்தி காட்டினார்.
இதேபோன்று பும்ரா, சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினார்கள். ஜடேஜாவை பற்றி சொல்லவே தேவையில்லை. இது போன்ற ஒரு பௌலிங் அட்டாக்கில் நான் இடம்பெற்று இருப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன். இது போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இடம் பிடித்திருப்பதன் மூலம் சூழலுக்கு ஏற்ப எப்படி தங்களை மாற்றிக் கொண்டு விளையாடுவது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் கேரம் பால் வகை நான் அதிகம் வீசுவேன். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமாக நான் கேரம் பால் வகை பந்து வீசியது கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்றால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும். அதே போல், பந்து வீசும் விதமும் ஒவ்வொரு வீரருக்கும் முக்கியம் என்று அஸ்வின் கூறியுள்ளார்.