சென்னை: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் நேர முடிவில் வங்கதேசம் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களுடன் களத்தில் உள்ளது. 2வது இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கிய வங்கதேசம் அணி பேட்ஸ்மேன்கள், அஸ்வினின் சுழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டை கொடுத்து சென்றனர்.
சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்த போது, டிக்ளேர் செய்தது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 119 ரன்களும், ரிஷப் பண்ட் 109 ரன்களும் விளாசினார். இதனால் வங்கதேசம் வெற்றிக்கு 515 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் வங்கதேசம் அணியின் தரப்பில் ஷத்மான் இஸ்லாம் - ஜாகீர் ஹசன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. பிட்சில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எந்த உதவியும் கிடைக்காததை பயன்படுத்தி, இருவரும் விரைவாக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த நிலையில், பும்ராவின் வேகத்தில் ஜாகீர் ஹசன் 33 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கில் அட்டாக்கில் பும்ரா - அஸ்வின் இணையை பயன்படுத்தினார். தொடர்ந்து அஸ்வின் பவுலிங்கில் ஷத்மான் இஸ்லாம் 35 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த மோமினுல் ஹல் 13 ரன்களில் எடுத்திருந்த போது, அஸ்வினின் மேஜில் பந்தில் போல்டாகி வெளியேறினார். இதனால் வங்கதேசம் அணி 124 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தொடர்ந்து அனுபவ வீரரான முஷ்ஃபிகுர் ரஹிம் களத்திற்கு வந்தார். அவர் அதிரடியாக ரன்கள் குவிக்க தொடங்க, அஸ்வின் பந்தில் அபாரமாக ஒரு சிக்சரை விளாசினார். அடுத்த பந்தில் பவுண்டரி விளாச ஆசைப்பட்டு மிட் ஆன் திசையில் தூக்கியடிக்க, அதனை லாவகமாக கேஎல் ராகுல் கேட்ச் பிடித்து அசத்தினார். இதன் மூலமாக சிக்ஸ் அடித்த அடுத்த பந்திலேயே அஸ்வின் பதிலடி கொடுத்து மிரட்டினார்.
இதன் மூலமாக முஷ்ஃபிகுர் ரஹீமை 5வது முறையாக அஸ்வின் வீழ்த்தி அசத்தியுள்ளார். தொடர்ந்து வங்கதேசம் அணி 146 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் போதிய வெளிச்சம் இல்லாததன் காரணமாக ஆட்டம் பாதியுடன் நிறுத்தப்பட்டது. இதனால் 3வது நாள் ஆட்டம் நேர முடிவில் வங்கதேசம் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்திருந்தது.
ஒருமுனையில் சிறப்பாக ஆடிய ஷான்டோ 51 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். வங்கதேசம் அணியின் வெற்றிக்கு இன்னும் 357 ரன்கள் தேவைப்படும் நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது. இதனால் 4வது நாள் ஆட்டம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.