புனே: வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம் கொடுத்த கேட்சை பாய்ந்து பிடித்த நிலையில், உடனடியாக பயிற்சியாளரை பார்த்து சிக்னல் கொடுத்தது குறித்து விவாதம் எழுந்துள்ளது.
உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஃபீல்டிங் செய்யும் இந்திய வீரர்களுக்கு, ஓய்வறையில் வைத்து இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் பதக்கம் வழங்கும் முறையை தொடங்கி வைத்துள்ளார். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஃபீல்டிங் செய்த விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சிறந்த ஃபீல்டிங் செய்ததற்காக ஆல் ரவுண்டர் ஷர்துல் தாக்கூருக்கு பதக்கம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. இந்த வீடியோக்கள் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. இதில் வங்கதேச அணியின் லிட்டன் தாஸ் மற்றும் ஹசன் இருவரும் அரைசதம் விளாசினர். இதனிடையே அபாயகரமான வீரரான முஷ்ஃபிகுர் ரஹிம் 40 ஓவர்களுக்கு பின் அதிரடிக்கு திரும்பினார்.
அப்போது 43வது ஓவரில் நட்சத்திர வீரர் பும்ரா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அப்போது பவுண்டரி அடிக்க முயற்சித்த ரஹீம், பாய்ண்ட் திசையில் நின்றிருந்த ஜடேஜா, புலி போல் பாய்ந்து அபாரமான கேட்சை பிடித்து அனைவரையும் மிரள வைத்தார். கேட்சை வெற்றிகரமாக பிடித்து எழுந்த பின், உடனடியாக பயிற்சியாளர் பக்கம் திரும்பிய ஜடேஜா, "பதக்கம் எனக்கு தான்" என்று சிரித்துக் கொண்டே சிக்னல் கொடுத்தார்.
இதனை பார்த்து கொண்டிருந்த பயிற்சியாளர் திலீப் உற்சாகமாக சிரித்தார். அதுமட்டுமல்லாமல் அருகில் இருந்த நடுவர் எராஸ்மஸ், ஜடேஜாவுக்கு பதக்கம் கொடுக்குமாறு திலீப்பிடம் எடுத்து கூறினார். ஜடேஜாவின் கேட்சை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடுவரும் மிரண்டு போனது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.