சென்னை : வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. பாகிஸ்தானை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அவர்களுடைய சொந்த மண்ணுக்கு சென்று வங்கதேச ஆணி தோற்கடித்தது.
இதனால் வங்கதேச அணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது. அதற்கு ஏற்றார் போல் முதல் இன்னிங்சில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். 144 ரன்கள் சேர்ப்பதற்குள் எல்லாம் ஆறு விக்கெட்டுகள் எடுத்து அசத்தினர்.

எனினும் அதன் பிறகு வங்கதேச அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்தவே இல்லை. இதனால் அந்த அணி தோல்வியை தழுவியது. இந்த சூழலில் வங்கதேச அணியின் தோல்விக்கான காரணங்கள் என்ன என்று தற்போது பார்க்கலாம். சென்னையில் இந்த டெஸ்ட் போட்டியில் பெரும்பாலான நேரம் வானம் மேகமூட்டத்துடன் தான் காணப்பட்டது.
சூரியன் மட்டும்தான் இல்லை என்றாலும், வெப்பம் அப்படியேதான் இருந்தது. சென்னையில் காற்றின் ஈரப்பதம் என்பது மிகவும் குறைவு. இதனால் இங்கு வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து பந்து வீச முடியாது. அப்படி தொடர்ந்து பந்து வீசினால் அவர்களுடைய உடல் தகுதி பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா இந்திய அணி வீரர்களான பும்ரா, ஆகாஷ் தீப் ஆகியோருக்கு அதிகபட்சமாக நான்கு ஓவர்களுக்கு மேல் தொடர்ந்து பந்து வீச வாய்ப்பு தரவில்லை.
இதன் மூலம் இந்திய பவுலர்கள் தங்களுடைய சக்தியை இழக்காமல் இருந்தார்கள். ஆனால் வங்கதேச அணி வீரர்கள் ஆரம்ப கட்டத்தில் சிறப்பாக பந்து வீசியதை பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து அவர்களை கேப்டன் நஜ்மூல், பந்து வீச சொன்னார். இதனால் காற்றின் ஈரப்பதம் குறைவாக இருந்தது காரணமாக வங்கதேச வீரர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் தங்களுடைய சக்தியை இழந்து விட்டார்கள்.
இதனால்தான் அஸ்வின் ஜடேஜா ஆகியோர் ரன்கள் சேர்க்கும் போது வங்கதேச வீரர்களால் பெரிய அளவில் தடுக்க முடியவில்லை.
அதேபோன்று அஸ்வின், ஜடேஜா பேட்டிங் செய்து கொண்டிருந்த சூழலில் வங்கதேச பவுலர்கள் பெரிய அளவில் எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை. அஸ்வின் கவுண்டர் அட்டாக்கில் வங்கதேச வீரர்கள் தங்களுடைய உத்வேகத்தை இழந்து விட்டார்கள். இந்த ஜோடியை பிரிக்க அவர்கள் வித்தியாசமான முயற்சியை ஏதும் செய்யவில்லை. குறிப்பாக அஸ்வினுக்கு உடலைக் குறி பார்த்து ஷாட் பால் வீசி இருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் லெங்த்தை அதிகமாக கொடுத்து ஷாட் பால் வீசியதால் அஸ்வின் தன்னுடைய உயரத்தை பயன்படுத்திக் கொண்டு அபாரமான ஷாட்களை ஆடினார். இதனால் அஸ்வினுக்கு ஷார்ட் பால் நன்றாக ஆட தெரியும் என நினைத்துக் கொண்டு வங்கதேச வீரர்கள் அதை நடைமுறைப்படுத்தவே இல்லை. முதலில் சுழற் பந்துவீச்சு கை கொடுக்கவே இல்லை. குறிப்பாக ஷகிபுல் ஹசன் தன்னுடைய அனுபவத்தை சரியாக பயன்படுத்தவில்லை.
முதலில் எட்டு ஓவர் வீசி 5 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட்டுகள் ஏதும் எடுக்காமல் இருந்தார். ஆனால் இதே ஹசன் மகமுத், இந்த தொடருக்கு முன்பு இங்கிலாந்துக்கு சென்று கவுண்டி கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடினார். ஒருவேளை ஷகிபுல் ஹசன் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தால் இந்தியா முதல் இன்னிங்ஸில் இவ்வளவு பெரிய இலக்கை நிர்ணயித்திருக்காது.
இதேபோன்று வங்கதேச அணியின் தோல்விக்கு மிகவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பியதுதான். புலியை பார்த்து பூனை சூடுப் போட்டுக் கொண்டது என்ற பழமொழிக்கு ஏற்ப, இங்கிலாந்து கிரிக்கெட் அணி அதிரடியாக விளையாடுகிறது என்பதை பார்த்து தாங்களும் அதிரடியாக ஆடி ரன்களை குவிக்க வேண்டும் என வங்கதேச வீரர்கள் தப்பு கணக்கு போட்டார்கள்.
ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக கல சூழல் இருந்தபோது, வங்கதேச வீரர்கள் கொஞ்சம் பொறுமையாக விளையாடி இருக்க வேண்டும். குறிப்பாக ஷகிபுல் ஹசன், லிட்டன் டாஸ் ஆகியோர் முதல் இன்னிங்ஸில் பொறுப்பாக விளையாடினார்கள். ஆனால் அவர்களால் நிலைத்து நின்று ஆட முடியவில்லை. இதைப்போல் வங்கதேச அணியின் மற்ற வீரர்களும் தங்களுடைய சாட் தேர்வில் கவனம் செலுத்தியிருந்தால் குறைந்தபட்சம் 200 ரன்களுக்கு மேலாவது அடித்திருக்கலாம்.
மேலும் பார்ட்னர்ஷிப்பை பெரிய அளவு அவர்களால் கட்டமைக்க முடியவில்லை. சென்னை போன்ற ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸில் நீங்கள் பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை என்றால் கிட்டத்தட்ட நீங்கள் தோல்வியை தழுவி விட்டீர்கள் என்று அர்த்தம். இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸ் அடுத்தடுத்து செய்த தவறிலிருந்து அவர்களால் மீள முடியவில்லை. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச வீரர்கள் யாரேனும் ஒருவர் அல்லது இருவர் மிகப்பெரிய சதம் அடித்தால் மட்டுமே இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.