கான்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா பிடித்த கேட்ச் ஒன்று இந்திய வீரர்களை வியப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. சுப்மன் கில் இரண்டு கைகளையும் தலையில் வைத்து தனது வியப்பை வெளிப்படுத்தினார். முகமது சிராஜ் மற்றும் விராட் கோலி அந்த கேட்ச்சை நம்ப முடியாமல் வியந்து போனார்கள்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஆடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. பின்னர் மழையால் முதல் நாள் ஆட்டமும், அடுத்த இரண்டு நாட்கள் ஆட்டமும் கைவிடப்பட்டன. இந்த நிலையில், நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்றது.

வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் தொடர்ந்து பேட்டிங் செய்தது. அந்த அணி முன்னதாக 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து அந்த அணி பேட்டிங் செய்த நிலையில், முஷ்பிகுர் ரஹீம், பும்ரா பந்து வீச்சில் பவுல்ட் அவுட் ஆனார். அடுத்து வந்த லிட்டன் தாஸ் பும்ராவின் ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகளை அடித்து மிரட்டினார்.
அவரது விக்கெட்டை விரைவாக வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது இந்திய அணி. அப்போது முகமது சிராஜ் வீசிய 50 வது ஓவரில் லிட்டன் தாஸ் ஃபோர் அடிக்க முயன்றார். ஆனால், பந்து மிட் ஆஃப் திசையில் உயரே சென்றது. அங்கு நின்றிருந்த கேப்டன் ரோஹித் சர்மா தனது வலது கையை மட்டும் தூக்கி, குதித்து கேட்ச்சை பிடித்தார். அதிர்ஷ்டவசமாகவே இது போன்ற கேட்ச்களை பிடிக்க முடியும் என்பதால் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
பந்து வீசிய முகமது சிராஜ் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தார். தனது தலையில் இரண்டு கைகளையும் வைத்து நம்ப முடியாமல் ஓடிச் சென்று ரோஹித் சர்மாவை பாராட்டினார் சுப்மன் கில். இதுபோன்ற காட்சியை எதிர்பார்க்காத ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர். இதை அடுத்து வங்கதேச அணி 148 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது. அடுத்து அஸ்வின் பந்து வீச்சில் ஷகிப் அல் ஹசன் ஆட்டம் இழந்தார். வங்கதேச அணி 66 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. மொமினுல் ஹக் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.