கான்பூர்: வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அதிரடி பேட்டிங் குறித்த திட்டத்தை ரோஹித் சர்மா எப்படி சொன்னார் என்ற சம்பவத்தை நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். 50 ஓவர்களில் 400 ரன்கள் விளாச வேண்டும் என்று ரோஹித் சர்மா பேசியதாக கூறியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடியும் என்று கூறப்பட்ட நிலையில், இந்திய அணியின் வரலாற்று சம்பவத்தால், முடிவு எட்டப்பட்டுள்ளது. சுமார் இரண்டரை நாட்கள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட போதும், இந்திய அணி வெல்ல வேண்டும் என்று தீவிர பசியுடன் களமிறங்கி அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது.

அதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 34.4 ஓவர்களில் டிக்ளேர் செய்தது புதிய வரலாறாக அமைந்துள்ளது. ஏனென்றால் எந்த அணியும் 34.4 ஓவர்களில் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்ததில்லை. ஒரேயொரு முறை தென்னாப்பிரிக்கா அணி ஒரு இன்னிங்ஸை ஆடாமல், டிக்ளேர் செய்தது. பின்னர் அதுவும் சூதாட்ட குற்றச்சாட்டுக்கு ஆளானாது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாட முடிவு செய்த சம்பவம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்துள்ளார். அதில், வங்கதேசம் அணியை முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் செய்த பின், ஓய்வறையில் அனைவரையும் அழைத்து ரோஹித் சர்மா ஒரு சிறிய மீட்டிங் போட்டார். அந்த மீட்டிங்கில் ரோஹித் சர்மா, அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 400 ரன்களை விளாசுவோம் என்று கூறினார்.
ஒருவேளை நாம் நினைத்ததை போல் நடக்காமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. 200 ரன்களுக்கு கீழ் ஆட்டமிழந்தால் கூட, நம்மால் இந்த போட்டியில் முடிவை ஏற்படுத்த முடியும் என்றார். அதன்பின் தொடக்க வீரர்கள் இருவரும் களமிறங்கினார்கள். நிச்சயம் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவார் என்று நினைத்திருந்தோம். ஆனால் ரோஹித் சர்மா சொல்லியதை போலவே முதல் பந்திலேயே சிக்சரை அடித்தார். ஒரு கேப்டன் சொன்னதை போல் செயல்பட தொடங்கினால், மற்ற வீரர்கள் அப்படியே பின் தொடர வேண்டும்.
அவர்களுக்கு வேறு வழியில்லை. அப்போது இந்திய அணி 3 ஓவர்களில் 50 ரன்களை கடந்திருந்தது. அங்கிருந்து நாங்கள் எந்த பக்கமும் பார்க்கவில்லை. அதேபோல் இந்திய அணியின் பவுலர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். அனைத்து வீரர்களும் ஒழுக்கத்துடன் ரன்களை விட்டுக் கொடுக்காமல் பவுலிங் செய்யக் கூடியவர்கள். விக்கெட் வீழ்த்த கூடிய பந்துகளை வீசக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
இது ஒரு பவுலரின் நம்பிக்கையாக மட்டும் பார்க்கக் கூடாது. ஒரு அணியின் நம்பிக்கையாக பார்க்க வேண்டும். ரோஹித் சர்மா 400 ரன்கள் அடித்த பின், அவர்களை மீண்டும் ஆல் அவுட் செய்வோம் என்று கூறியது, அனைவரின் மீது இருந்த நம்பிக்கையால் தான். எத்தனையோ முறை எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறோம். எதிர்காலத்தில் நமது பவுலிங் அட்டாக்கை சில அணிகள் அட்டாக் செய்யக் கூடும். ஆனாலும் இந்த பவுலிங் அட்டாக் கொஞ்சம் ஸ்பெஷலானது. இதனை அடுத்த தலைமுறை வீரர்கள் தொடர்வார்கள் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.