சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். வங்கதேசம் அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, ஒரு அரைசதம் கூட அடிக்காதது ரச்கர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பும்ரா ஆகிய மூவரும் களமிறங்கியதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 259 நாட்களுக்கு பின் விராட் கோலி டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற வங்கதேசம் அணி கேப்டன் ஷான்டோ பவுலிங்கை தேர்வு செய்தார். வானிலை மேகமூட்டத்துடன் இருந்தது மட்டுமல்லாமல், பிட்சும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே வங்கதேசம் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்ததாக பார்க்கப்படுகிறது.
இதன்பின் இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோஹித் சர்மா - ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஜெய்ஸ்வால் சிறப்பாக தொடங்க, ரோஹித் சர்மா ஸ்விங் பந்துகளுக்கு வழக்கம் போல் தடுமாறினார். அதனை புரிந்து கொண்டு ஹசன் மஹ்முத் திட்டமிட்டு ரோஹித் சர்மாவை 6 ரன்களில் வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.
இதனால் ரோஹித் சர்மா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஏனென்றால் எந்த அணியாக இருந்தாலும் ஒரு கை பார்க்கும் ரோஹித் சர்மா, வங்கதேசம் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை வங்கதேசம் அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடி இருக்கிறார்.
இதற்கு முன்பாக 2015ஆம் ஆண்டு ஃபதுல்லா மைதானத்தில் வங்கதேசம் அணிக்கு எதிரான ரோஹித் சர்மா நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்கினார். அப்போது 9 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்த போது, ஷகிப் அல் ஹசன் பவுலிங்கில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து 2019ஆம் ஆண்டு இந்தூர் மைதானத்தில் நடந்த போட்டியில் ரோஹித் சர்மா 14 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவின் ராசியான மைதானமான கொல்கத்தா மைதானத்தில் ஆட்டம் நடந்தது. அந்தப் போட்டியிலும் ரோஹித் சர்மா 35 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்த போது, எபாடத் ஹொசைன் பந்தில் ஆட்டமிழந்தார். தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் ரோஹித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்திருக்கிறார்.
வங்கதேசம் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 6, 6, 21 மற்றும் 6 என்று மொத்தமாக 39 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இதனால் வங்கதேசம் அணி என்றாலே ரோஹித் சர்மாவுக்கு கண்டம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனை அடுத்த இன்னிங்ஸ் அல்லது அடுத்த போட்டியிலாவது ரோஹித் சர்மா மாற்றிக் காட்டுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.