முதல் டி20 போட்டி
இந்தியா - வங்கதேசம் இடையே ஆன முதல் டி20 போட்டி டெல்லியின் கடும் காற்று மாசுக்கு நடுவே தொடங்கி நடைபெற்றது. போட்டி துவங்கும் வரை காற்று மாசு பற்றிய பேச்சுக்களே நீடித்த நிலையில், போட்டி துவங்கிய பின் இந்திய அணியின் தடுமாற்றங்கள், தவறுகள் பேசுபொருளாக மாறியது.
இந்தியா பேட்டிங் எப்படி?
டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்தது இந்தியா. முதல் ஓவரில் ரோஹித் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய தவான் 41 ரன்கள் குவித்தார், மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. இந்தியா 20 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்தது.
வங்கதேசம் அபார சேஸிங்
இந்தியா வெற்றி பெறக் கூடிய அளவுக்கு ரன்கள் குவித்து இருந்தாலும், வங்கதேசம் சேஸிங்கில் பெரிய தடுமாற்றம் இல்லாமல் கலக்கியது. முதல் ஓவரில் லிட்டன் தாஸ் 7 ரன்களில் ஆட்டமிழந்தது மட்டுமே சிறிய பாதிப்பாக அமைந்தது.
அந்த ஓவர்
அந்த அணி சேஸிங் செய்து வந்த போது 10வது ஓவரை சாஹல் வீசினார். அந்த ஓவரில் மூன்று முறை டிஆர்எஸ்-இல் தவறு செய்தது இந்தியா. அதில் இரண்டு விக்கெட் வாய்ப்புகள் பறிபோனது.
இரண்டு டிஆர்எஸ் வாய்ப்பு
அந்த ஓவரில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தை பேட்ஸ்மேன் ரஹீம் சரியாக ஆட முடியாமல் திணறினார். இரண்டு முறையும் பந்து அவர் காலில் பட்டது. இரண்டாவது பந்தின் போது அம்பயர் அவுட் கொடுக்க மறுக்கவே, சாஹல், ரோஹித் விவாதித்தனர். எனினும், ரிவ்யூ கேட்கவில்லை. மூன்றாவது பந்தின் போது சாஹல் அவுட் கேட்டு, அம்பயர் மறுத்தார். இந்த முறை ரிவ்யூ கேட்பது குறித்து விவாதம் கூட நடக்கவில்லை.
ஒரு தவறான டிஆர்எஸ்
மேலும், அதே ஓவரின் கடைசி பந்தை கேட்ச் பிடித்தார் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. ஆனால், பந்து எட்ஜ் ஆனது என அடித்து கூறினார் பண்ட். அதை நம்பி ரிவ்யூ கேட்டார் கேப்டன் ரோஹித். ஆனால், பந்து, பேட்டில் படவில்லை என ரீப்ளேவில் தெரிந்தது.
எளிதான வெற்றி
போட்டியின் முக்கியமான கட்டத்தில், விக்கெட் வாய்ப்புகளையும், ஒரு டிஆர்எஸ்-ஐயும் கோட்டை விட்டது இந்திய அணி. மறுபுறம் வங்கதேசம் எளிதாக ஆடி 20வது ஓவரின் மூன்றாவது பந்தில் வெற்றிக் கோட்டை தாண்டியது.
ரோஹித் பேச்சு
போட்டியில் தோல்வி அடைந்த பின் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோஹித் சர்மா, தோல்விக்கு என்ன காரணம் என்பதை பற்றி பேசினார். வங்கதேசம் துவக்கம் முதலே இந்தியாவை அழுத்தம் கொடுத்து ஆடியது எனக் கூறி பாராட்டினார்.
அனுபவமின்மை
பின்னர், வெற்றி பெறக் கூடிய அளவு ஸ்கோர் எடுத்தும், அனுபவமற்ற வீரர்களின் தவறுகளால் தோல்வி அடைந்தோம். இளம் வீரர்கள் அடுத்த முறை இது போன்ற தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும் எனக் கூறினார்.
டிஆர்எஸ் சொதப்பல்
இரண்டு எல்பிடபுள்யூ வாய்ப்புகளை கோட்டை விட்டதை ஒப்புக் கொண்ட ரோஹித் சர்மா, அடுத்து ரிஷப் பண்ட்டின் சொதப்பல் ரிவ்யூ பற்றி பேசினார். "ரிவ்யூ எங்களின் தவறு தான். அதைப் பற்றி மட்டும் பேச வேண்டாம்" என்றார். அடுத்த போட்டியிலாவது பண்ட் சரியாக ரிவ்யூ கேட்க வேண்டும்.