கான்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜாவை நம்பவில்லை. ஆனால், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அதிக ஓவர்களை அளித்தார் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குற்றம் சுமத்தி இருக்கிறார். முதல் நாள் ஆட்டத்தில் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் அதில் ரவீந்திர ஜடேஜா ஒரு ஓவர் கூட வீசவில்லை.
அஸ்வினுக்கு மட்டும் 9 ஓவர்கள் பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. வங்கதேச அணியின் முதல் நான்கு பேட்ஸ்மேன்களுமே இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பதால் கேப்டன் ரோஹித் சர்மா வலது கை ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அதிக ஓவர்களை அளித்தார். ஆனால், இடதுகை சுழற் பந்துவீச்சாளரான ரவீந்திர ஜடேஜா இதற்கு முன் இடது கை பேட்ஸ்மேன் விக்கெட்களை சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டது. வெறும் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. பும்ரா மற்றும் முகமது சிராஜுக்கு விக்கெட்கள் கிடைக்கவில்லை. மூன்றாவதாக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பந்து வீச வாய்ப்பு அளித்தார் கேப்டன் ரோஹித் சர்மா. அதன் பின் நான்காவதாக பந்து வீசிய ஆகாஷ் தீப் வங்கதேச அணியின் துவக்க வீரர்கள் இருவரின் விக்கெட்களையும் வீழ்த்தினார்.
அதன் பின் அஸ்வின் வங்கதேச அணியின் நான்காம் வரிசை வீரரான நஜ்முல் ஹுசைன் ஷான்டோவின் விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால், ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒரு ஓவர் கூட பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இது குறித்து. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், "2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய மண்ணில் ரவீந்திர ஜடேஜா இடது கை பேட்ஸ்மேன் அலெஸ்டர் குக் விக்கெட்டை 8 இன்னிங்ஸ்களில் ஆறு முறை வீழ்த்தி இருக்கிறார். அவருக்கு எதிராக 75 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இருந்தார். ஆனால், ரோஹித் சர்மா இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஜடேஜாவுக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கவில்லை." என கூறி இருக்கிறார்.
மேலும், "ஒவ்வொரு கேப்டனும் தங்களிடம் இருக்கும் பந்து வீச்சாளரை வைத்து சில அணுகுமுறையை வைத்துள்ளனர். சில பந்துவீச்சாளர்களை மட்டுமே கேப்டன்கள் அதிகம் நம்புவதில் தவறில்லை. ஆனால் இந்தத் தொடரில் மட்டுமல்ல, பலமுறை சுழற் பந்துவீச்சாளர்கள் தேவை என்றால் ரோஹித் சர்மா அஸ்வினை மட்டுமே அதிகமாக நம்புகிறார். இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருப்பதால், அவர் அதை செய்திருக்கலாம்." என்றார்,
"ஆனால், இதே தொடரில் இடது கை சுழற் பந்துவீச்சாளர் ஷகிப் அல் ஹசன், இடது கை பேட்ஸ்மேனான ரிஷப் பண்டை சிரமத்தில் ஆழ்த்தினார். ஒரு முறை டிராப் கேட்ச் கூட ஆனது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால், ஜடேஜா போல ஒரு நல்ல பவுலரை வைத்துக்கொண்டு இடது கை பேட்ஸ்மேனுக்கு எதிராக பயன்படுத்தாமல் இருப்பது சரியல்ல. இது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது." என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்து இருக்கிறார்.