மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் நீண்ட காத்திருப்புக்கு பின் இடம் பெற்றவர் தான் சர்பராஸ் கான். அவரது 19 வயதிலேயே சிறப்பாக பேட்டிங் ஆடி உள்ளூர் போட்டிகளில் பல சாதனைகளை செய்து வந்தார். அப்போதே அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், ஏழு ஆண்டுகளாக அவரை தவிக்க விட்டது பிசிசிஐ. கடைசியாக 2024 துவக்கத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்தத் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் பல்வேறு காரணங்களால் இடம் பெறவில்லை.

அந்த இடைவெளியில் தான் சர்பராஸ் கானுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தனக்கு கிடைத்த வாய்ப்பில் மூன்று போட்டிகளில் மூன்று அரை சதங்கள் அடித்து இருந்தார் சர்பராஸ் கான். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் பிளேயிங் லெவனில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்காது என இந்திய அணி வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. சுப்மன் கில், விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் மிடில் ஆர்டரில் தங்கள் இடத்தை உறுதி செய்து இருப்பதுதான் இதற்கு காரணம்.
தற்போதைய நிலையில் இந்திய பேட்டிங் வரிசையில் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் முதல் ஆறு இடங்களில் இடம் பெறுவார்கள். அடுத்து ஆல் ரவுண்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் / முகமது ஷமி இடம் பெறுவார்கள்.
உடல் பருமனாக இருப்பதால் கிண்டல்.. 30 நிமிடத்தில் 5 கிமீ. ஓடும் இந்திய வீரர் சர்பராஸ் கான்
பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டரில் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருப்பதால் சர்பராஸ் கானுக்கு இடம் கிடைப்பது கடினமே. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட தான் அதிக எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்ளவில்லை என கூறியிருந்தார். அதன் மூலம் அவருக்கும் தனக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்ற விஷயம் தெரிந்தே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். அதே சமயம் அவர் டெஸ்ட் அணியில் மாற்று வீரராக இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.