மும்பை : 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் இன்று முதல் தொடங்கி வரும் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்திய அணி கடந்த 2013ஆம் ஆண்டு தான் ஐசிசி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. t20 உலக கோப்பையை பொருத்தவரை 2007 ஆம் ஆண்டு தான் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதனால் இந்திய அணி நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் எப்படியாவது டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று உத்வேகத்தில் களமிறங்கி உள்ளனர். இந்த நிலையில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதிய பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் இந்திய வீரர்கள் பலரும் தங்களது எதிர்பார்ப்பை மீறி சிறப்பாக விளையாடினார்கள்.
குறிப்பாக ரிஷப் பன்ட் காயத்திலிருந்து திரும்ப இந்திய அணிக்கு வந்து தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்டின் ஆக்ரோஷமான ஆட்டம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. கடந்த டி20 உலக கோப்பை போட்டியில் ரிஷப் பண்டிற்கு போதிய வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் தற்போது பயிற்சி ஆட்டத்திலே தன்னுடைய திறமையை நிரூபித்திருப்பதால் ரிஷப் பண்ட், ஒரு முக்கிய வீரராக இந்திய அணியில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போன்று சூரிய குமார் யாதவும் தான் எந்த இடத்தில் விட்டாரோ, அதே இடத்தில் தொடங்குவது போல் அதிரடியை காட்டி இருக்கிறார். இதனால் சூரிய குமார் பார்மும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த தொடரில் இந்தியாவுக்கு கருதப்படுகிறது. இதே போன்று ஐபிஎல் போட்டிகள் சரியாக விளையாடாத ஹர்திக் பாண்டியா நேற்று பயிற்சி ஆட்டத்தில் பிரமாதமாக விளையாடினார்.
23 பந்துகளில் ஹர்திக் 40 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு சிக்சர், இரண்டு பவுண்டரிகள் அடங்கும். இந்திய அணியில் இந்த மூன்று வீரர்களும் தற்போது நல்ல பார்மில் இருப்பது நடப்பு உலக கோப்பை தொடரில் இந்தியா கைப்பற்ற அதிக வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா போன்ற வீரர்களும் ஃபார்முக்கு திரும்பினால் இந்திய ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது.