நியூயார்க் : ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் விதமாக வங்கதேச அணியுடன் இந்தியா பயிற்சி ஆட்டத்தில் இன்று விளையாடியது. நியூயார்க்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பிரமாண்ட மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா யோசிக்காமல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறங்கவில்லை. யாருமே எதிர்பாராத வகையில் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 19 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் ஒரு ரன்னில் ஆட்டம் இழக்க, இதனை அடுத்து 18 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்காக விளையாடுகிற ரிசப் பண்ட் அதிரடியை காட்டினார்.
32 பந்துகளை எதிர்கொண்ட அவர் நான்கு பவுண்டரி, நான்கு சிக்சர் என 53 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில் இது பயிற்சி ஆட்டம் என்பதால் பண்ட், மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக ரிட்டையர்ட் அவுட் ஆனார். இதேபோன்று சூரிய குமார் யாதவும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 18 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு பவுண்டரிகள் அடங்கும்.
எனினும் நடு வரிசையில் சிவம் துபேக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் சிவம் துபே கடந்த சில போட்டிகளாக சரியாக விளையாடவில்லை. இன்றைய ஆட்டத்திலும் சிவம் துபே ரன்களை அடிக்க முடியாமல் தடுமாறினார். அவர் எதிர்கொண்ட 16 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே அவர் சேர்த்தார். இதில் ஒரு சிக்ஸர் மட்டுமே அவர் அடித்தார்.
இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மோசமாக இருந்தது. சிவம் துபேக்கு தமக்கு கிடைத்த முக்கிய வாய்ப்பை வீணடித்து விட்டார். எனினும் இறுதிக்கட்டத்தில் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். கடந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் ஹர்திக் பாண்டியா தடுமாறிய நிலையில் இன்றைய ஆட்டத்தில் அவர் தன்னுடைய திறமையை நிரூபித்தார். வங்கதேச பந்துவீச்சை சுளுக்கு எடுத்த அவர் ஹாட்ரிக் சிக்சர் உட்பட நான்கு சிக்ஸர் இரண்டு பவுண்டரி என 23 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார்.
இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 173 அளவில் இருந்தது. இதேபோன்று மற்றொரு சிஎஸ்கே வீரரான ஜடேஜாவுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் கடுமையாக தடுமாறினார். ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் திணறினார். இதனால் இந்திய அணியின் ரன் வேகம் குறைந்தது. ஜடேஜா ஆறு பந்துகளை எதிர்கொண்டு வெறும் நான்கு ரன்கள் மட்டுமே சேர்த்தார். சிஎஸ்கே வீரர்கள் இருவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் அளவிற்கு 182 ரன்கள் எடுத்தது.