சென்னை : இந்திய, வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் கிரிக்கெட் வர்ணனையாளராக ஆங்கிலத்தில் முதல் முறையாக அறிமுகமானார். இந்திய அணிக்காக இதுவரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அபினவ் முக்குந்த் 320 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் இரண்டு அரை சதம் அடங்கும். அதிகபட்சமாக அபினவ் முகுந்த் 81 ரன்கள் அடித்திருந்தார். ஒட்டுமொத்தமாக 145 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அபினவ் முகுந்த் மொத்தமாக 10258 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 31 சதம், 37 அரை சதம் அடங்கும்.

அபினவ் முகுந்த், 20 வயது ஆவதற்கு முன்பே முதல் தர டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முச்சதம் அடித்திருக்கிறார். ரஞ்சிக்கோப்பை, இராணி கோப்பை அறிமுகப் போட்டிகளில் சதம் அடித்து அபினவ் முகுந்த் சாதனை படைத்து இருக்கிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் இல் விராட் கோலி உடன் அபினவ் முகுந்த், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
ஆனால் அபினவ் முகுந்த் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலே அபினவ் முகுந்த், விளையாடி வந்தார். தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள முகுந்த் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பங்கு பெற்று இருக்கிறார். அதுவும் சென்னையில் தமக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதால் முகுந்த் இதை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் போட்டி தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு அபினவ் முகுந்த், பாட்டி காலமாக இருக்கிறார். இது குறித்து போட்டி முடிந்தவுடன், தற்போது அபினவ் முகுந்த் பெரிய பதிவை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் நான் முதல்முறையாக ஆங்கிலத்தில் கிரிக்கெட் வர்ணனையாளராக கலந்து கொள்ள இருந்தேன். அதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு என்னுடைய பாட்டி காலமானார்.
கிரிக்கெட் வீரர்களில் இருந்து கிரிக்கெட் வர்ணனையாளராக இந்த போட்டியை நான் தொகுத்து வழங்கும்போது கொஞ்சம் பதற்றத்துடன் இருந்தேன். ஆனால் சேப்பாக்கம் எனது சொந்த மண் என்பதால் நான்கு நாட்கள் நான் எளிதில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி விட்டேன். மேலும் உள்ளூர் வீரர் அஸ்வின் அதிக முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி வார்னேவின் சாதனையை சமன் செய்ததை கண்டு மகிழ்ச்சி கொள்கின்றேன்.
ஒரு தொகுப்பாளராக ஆங்கிலத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி என்னுடைய குறிக்கோளை நிவர்த்தி செய்து விட்டேன். இந்த கடினமான நேரத்தில் என்னுடன் துணை நின்ற பார்த்தீவ் பட்டேல், தமீம் இக்பால் போன்ற வீரர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். தொகுப்பாளனாக என்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை நான் மகிழ்ச்சியுடன் கடந்தேன். கடினமான இந்த காலத்தில் நான் அமைதியாக இருந்து என்னுடைய பணியை சிறப்பாக செய்ததை என்னுடைய பாட்டி மேலிருந்து பார்ப்பார் என்று நம்புகிறேன் என அபினவ் முகுந்த் கூறியுள்ளார்.
அபினவ் முகுந்துக்கு தற்பொழுது 34 வயது தான் ஆகிறது. ஆனால் அவருக்கு இருக்கும் திறமைக்கு போதிய வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை என்பதுதான் சோகமான உண்மை. எனினும் கிரிக்கெட் வீரராக பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை என்றாலும் கிரிக்கெட் வர்ணனையில் தமக்கு கிடைத்த வாய்ப்பை தனிப்பட்ட இழப்பையும் மீறி அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.