மும்பை : இந்தியா, பாகிஸ்தான் அரசியல் ரீதியாக பிரிந்து இருந்தாலும், இந்தியாவின் கிரிக்கெட் வீரர்களை பின் தொடரும், பல பாகிஸ்தான் ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது இந்த ஹீரோ பட்டியலில் இணைந்துள்ளார் ரிஷப் பண்ட்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்த போது அவருக்காக பாகிஸ்தான் மக்கள் கவலை அடைந்ததாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் வசீம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கென்று தவிர்க்க முடியாத ஒரு இடத்தை பண்ட் பிடித்தார். அது மட்டும் அல்லாமல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய மண்களில் பண்ட், டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்தார்.
இந்த நிலையில் விபத்தில் சிக்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக கிரிக்கெட்டை விட்டு விலகி இருந்த பண்ட், தற்போது ஐபிஎல் டி20 உலக கோப்பை தொடர் என இந்திய அணியில் விளையாடி வருகிறார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மீண்டும் டெஸ்ட் களத்திற்கு காலடி எடுத்து வைத்த பண்ட் சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்த நிலையில் ரிஷப் பண்ட் குறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வசீம் அக்ரம் ரிஷப் பண்டின் பேட்டிங்கை பாருங்கள்.
அது ஒரு அதிசயம் போல் இருக்கிறது. பேரிழப்பை தாண்டி தற்போது அவர் களத்தில் செயல்பட்ட விதம் அவர் ஒரு சூப்பர் மேன் என்பதையே காட்டுகிறது. அவருக்கு விபத்து ஏற்பட்டபோது பாகிஸ்தானில் நாங்கள் எல்லாம் அவருக்காக வருத்தப்பட்டோம். அவருடைய நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டேன்.
ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய விதம் ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்தது எல்லாம் பிரமிக்க தக்கது. அதுவும் ஆண்டர்சம் போன்ற வீரரிடம் அவர் அடித்த ரிவர்ஸ் ஸ்வீப் பாராட்டுக்குரியது. இப்படி ஒரு விபத்தில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்து ரன்கள் குவிப்பது எல்லாம் சாதாரண விஷயம் கிடையாது.
இதன் மூலம் அவர் மனதளவில் எவ்வளவு வலிமையானவர் என்பதை காட்டுகிறது. பண்டின் கதை இனிவரும் தலைமுறையினருக்கு ஒரு ஊக்கத்தை கொடுக்கும். உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்றால் இனி பண்ட், என்ன செய்தார் என்பதை சொன்னாலே போதும்.
விபத்திலிருந்து திரும்பிய பிறகு ஐபிஎல் தொடரில் 446 ரன்கள் குவித்தார். அதில் ஸ்ட்ரைக் ரேட் 155 சராசரியாக 40 ரன்கள் அவர் எடுத்திருக்கிறார். இது எல்லாம் பார்க்கும்போது அவர் ஒரு அதிசய பிறவி என்று நினைக்கத் தோன்றுகிறது என்று வசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.